

நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் போன்ற தொற்றா நோய்களைச் சரியான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைக்காதபோது, பல முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
அதில், முக்கியமானது சிறுநீரகங்கள். முற்றிலும் செயலிழந்த சிறுநீரகங்களுக்கு (End stage renel disease) மாற்றாக அவற்றின் முக்கியப் பணியான ரத்தத்திலிருந்து உடலின் வளர்சிதை மாற்ற வினைகளின் இறுதியில் உருவாகும் நச்சுப் பொருள்களையும் மிகுதியான நீரையும் வெளியேற்ற ‘டயாலிசிஸ்’ எனும் உயிர்காக்கும் சிகிச்சை வழக்கத்தில் உள்ளது.
நாளுக்கு நாள் டயாலிசிஸ் தேவைப்படும் மக்கள் நம்மிடையே அதிகரித்து வருகிறார்கள். ஆனால், சமூகத்தில் டயாலிசிஸ் குறித்து வீண் அச்சம், அபாயகரமான சிகிச்சை என்று தவறான கருத்துகள் நிலவுகின்றன.
முற்றிலும் செயலிழந்த சிறுநீரகங் களை எந்தச் சிகிச்சை மூலமும் மீட்க இயலாது. இதில், கிட்டத்தட்ட 100% நுண் வடிக்கட்டிகளான நெஃப்ரான்கள் அழிந்திருக்கும்.
நெஃப்ரான்கள் முழுவதும் அழிந்துவிட்டதைச் சரிசெய்து செப்பனிடுவது முடியாத காரியம். தனது பணியை நிறுத்திவிட்ட சிறுநீரகங்களுக்கு மாற்றாக, அவற்றின் பணியை வெளியே இருந்து செயற்கையாக செய்யும் சிகிச்சை முறையே டயாலிசிஸ்.
எப்போது பரிந்துரை?
சிறுநீரகங்கள் ஏதேனும் கடுமையான நோய்த் தொற்று அல்லது நோய் நிலை தீவிரமடைதல் அல்லது நஞ்சு உட்கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக திடீர் செயலிழப்பு நிலைக்குச் செல்லும்போது (Acute Renal Failure) நீண்ட நாள்களாகச் சிறுநீரக நோய் இருந்து அதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக அழற்சி, செயலிழப்பு (Chronic Renal Failure) ஏற்படும்போது டயாலிசிஸ் கட்டாயம் தேவை. தற்காலிகக் காரணங்களில்
சிறுநீரகம் வேலை செய்யத் தொடங்கியவுடன் டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டுவிடும். நாள்பட்ட செயலிழப்பில் டயாலிசிஸ் தொடர் சிகிச்சையாகத் தேவைப் படும். நாள்பட்ட சிறுநீரக அழற்சியால் முற்றிலும் செயலிழந்த சிறுநீரகங்களுக்கு மாற்று சிறுநீரகங்கள் அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட வேண்டும்.
இதைச் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை என்கிறோம். அத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் வரை உயிரையும் உடலையும் நல்ல முறை யில் பராமரிக்க, டயாலிசிஸ் சிகிச்சை சிறந்த பாலமாகச் செயல்படுகிறது. சிலருக்கு வயது முதிர்வு, பல இணை நோய்களின் காரண மாகவோ, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய இயலாத நிலையோ ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உயிர்காக்கும் ஒரே சிகிச்சை டயாலிசிஸ்தான்.