

‘காதுகள்’ என்கிற புகழ்பெற்ற நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. அதில் அதன் ஆசிரியர் எம்.வி.வெங்கட்ராம், ‘ஒரு போதையை வெல்ல, அதைவிடப் பெரிய போதை தேவைப்படுகிறது’ என்று சொல்வார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம் இந்தக் கருத்தின் உண்மையை உணரலாம்.
குடிப்பழக்கத்தை நிறுத்தியதும் உருப்படியாக என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் குடிப்பழக்கத்துக்கே திரும்புபவர்கள் உண்டு. அதேபோலத் திறன்பேசிகளுக்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள அதைவிட அதிக மகிழ்ச்சியைத் தரும் செயல்களைச் செய்யப் பழக்கிக் கொள்ள வேண்டும்.
அதீதத் தூண்டுதல்கள் இங்கு நாம் மீண்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. பென்ஸ் காரில் செல்லப் பழகிவிட்டால், அதன்பின் நகரப் பேருந்தில் செல்ல மாட்டோம்.
அதுபோலத் திறன்பேசிகள் தரும் அதீத தூண்டுதல்களுக்குப் பழக்கப்பட்ட நம் மூளை மற்ற செயல்களில் அந்த அளவுக்குத் தூண்டுதல் கிடைக்காமல், மீண்டும் திறன்பேசிகளுக்கே போய்விடும். நாள்தோறும் ஒரு பாட்டில் மது அருந்துபவர், அதை நிறுத்திவிட்டுத் தேநீர் குடித்தால், அதில் அவருக்குப் போதை கிடைக்குமா? அதுபோலத்தான்.
அதனால்தான் திறன்பேசிகளின் தொடர் தூண்டுதல்களில் இருந்து விலகி இருத்தல் அவசியமாகிறது. புறத்தூண்டுதல்களிலிருந்து விலகித் தனிமையில் இருக்கும்போது மூளை கொஞ்சம் சற்று தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கும்.
பல பிரபலங்கள், குறிப்பாக அறிவுசார்ந்த வேலைகளைச் செய்யக்கூடிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்றவர்கள் அடிக்கடித் தனிமையில் இருப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர். அப்போதுதான் மிகத் தெளிவாக யோசிக்க முடிந்ததாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.