Published : 01 Feb 2020 11:14 AM
Last Updated : 01 Feb 2020 11:14 AM

மனமே நலமா?

ஆசாத்

‘மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்’ என்பது வள்ளுவர் வாக்கு. வள்ளுவரின் காலந்தொட்டே மனநலம் பற்றிய சிந்தனை எழுந்துள்ளது. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், அதனால் விளையும் செயல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பே, மனநலத்துக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் மேம்படுத்தும் நோக்கில் ஸ்டான்லி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை மனநலக் கையேட்டை வெளியிட்டுள்ளது. மன வருத்தம், தற்கொலை, மனப் பதற்றம், ஆளுமைக் கோளாறு குறித்த விளக்கங்கள் அந்தக் கையேட்டிலிருந்து இங்கே எடுத்துத் தரப்பட்டுள்ளன.

மன வருத்தம்

ஒரு இயல்பான மனநிலை, வேதனையான உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடே இந்த மன வருத்தம். இந்த வருத்தம், சோர்வு தொடர்ந்து இருந்து தனக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினைகளைத் தருமானால் மன நோயாக மாறுகிறது. மனப் பாதிப்புகளிலேயே மிக அதிகமாகவும் பரவலாகவும் காணப்படுவது மன வருத்த நோய். ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதிகமாகப் பாதிக்கப்படுவது வயது முப்பதிலிருந்து ஐம்பதுவரை.

இந்த நோயைக் கண்டறியும் அறிகுறிகள்

# உறக்கமின்மை

# பசியின்மை

# எதிலும் நாட்டமின்மை

# எளிதில் சோர்வடையும் நிலை

# செயலில் மந்தநிலை

# மனத்தளவில் மகிழ்ச்சியின்மை

# தன்னம்பிக்கை இழந்த நிலை

எதிலும் எதிர்மறை எண்ணங்கள் எழும் நிலை காணப்படுகிறது. என்னால் முடியாது, எதிர்காலம் எனக்கில்லை, இவ்வுலகில் வாழ்வது வீணே என்பது போன்ற எண்ணங்கள் அதிகமாகும்போது தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இந்நோயை முன்பே கண்டறிந்து மனநல நிபுணரை அணுகி உரிய நேரத்தில் மருந்துகள் உட்கொண்டு மனவழி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தற்கொலை

தற்கொலை என்பது தன் உயிரைத் தானே அழித்துக்கொள்வது. நாற்பது விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

காரணங்கள்

# தனி மனிதக் காரணங்கள்

# சமூகக் காரணங்கள்

சில மனநல நோய்கள்

தனிமனிதக் காரணங்களாகக் கருதப்படுவது ஏமாற்றம், தோல்வி, இழப்பு, அவமானம் ஆகியவை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மதம், அரசியல் எனப் பல சமூகக் காரணங்கள் உள்ளன.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் திறன், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனஉறுதி குறையும்போது, தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. பிரச்சினைகளை மற்றவர்களிடம் பேசும்போது மனபாரம் குறையும், ஒரு தீர்வு கிடைக்க வழிவகுக்கும். அந்த ஒரு நொடியில் அவரது பிரச்சினையைக் கேட்டு அரவணைத்து ஆதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தற்கொலையிலிருந்து மீள, மறுவாழ்வு பெற ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு செய்ய முடியவில்லையெனில் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால், தற்கொலையைத் தடுக்க முடியும்.

மனப் பதற்றம்

மனப் பதற்றம் என்பது அச்சுறுத்தலின்போதோ அல்லது ஆபத்தான - கடினமான சூழ்நிலையிலோ நாம் அனைவரும் பெறும் ஒரு உணர்வு. ஆனால், நீங்கள் எந்தக் காரணமுமின்றிக் கவலைப்படுகிறீர்கள் அல்லது பதற்றப்படுகிறீர்கள் என்றால் அது வாழ்க்கையைப் பாதிக்கும்.

இதில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

# ஜெனரல் ஆன்சைட்டி டிஸ்ஆர்டர் (General Anxiety Disorder)

# பேனிக் அட்டாக் (Panic Attack)

# ஃபோபியா (Phobia)

நோய்க்கான காரணங்கள்

# மரபு வழி

# லேசான பதற்றத்தைக்கூடத் தீவிர உடல் நோயின் அறிகுறிகள் என்று நம்புவது

# உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள்

# மனநலப் பிரச்சினைகள்

சிகிச்சை முறைகள்

# நீங்கள் நம்புகிற - மதிக்கும் ஒரு நல்ல நண்பர் அல்லது உறவினருடன் பேச முயல வேண்டும்.

# ஓய்வெடுப்பதற்கான சில சிறப்பு வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

# மனநல மருத்துவரை நாட வேண்டும்.

ஆளுமைக் கோளாறு

ஆளுமை என்பது நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம் என்பதைக் குறிப்பதாகும். ஆளுமைக் கோளாறு காரணமாக,- ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுக்கு மற்றவர்களுடன் வாழ்வது கடினமாக இருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்து இந்தப் பண்புகளை மற்றவர்கள் அடிக்கடி கவனித்திருப்பார்கள்.

# உதாரணமாக, நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் அல்லது தக்க வைத்துக்கொள்வதில் சிக்கல்

# வேலை செய்யும் நபர்களுடன் பழகுவதில் சிக்கல்

# நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பழகுவதில் சிக்கல்.

# சிக்கலிலிருந்து விலகி இருப்பது.

# உங்கள் உணர்வுகள் அல்லது நடத்தையைக் கட்டுப்படுத்த இயலாமை

# மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடப்பதில் கடினமாக இருத்தல்.

இது உங்களை மகிழ்ச்சியற்ற / துன்பகரமான அல்லது மற்றவர்களை வருத்தப்படுத்துதல் அல்லது தீங்கு விளைவித்தல் போன்ற நிலைக்குத் தள்ளினால், உங்களுக்கு ஆளுமைக் கோளாறு இருக்கலாம். இதுவே மனநலப் பிரச்சினைக்கோ, போதைப் பொருட்களுக்கு அடிமை ஆவதற்கோ காரணமாக இருக்கலாம்.

உதவி பெறும் முறைகள்

# சுயஉதவி முறைகள்

# மன அழுத்தமாக இருக்கும்போது ஓய்வெடுக்க முயலுங்கள்.

# ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது அவசியம்

# உடல் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள்.

# சில வழக்கமான உடற்பயிற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

# நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஈடுபடுங்கள்.

ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவருடன் வாழும்போது அவர்களுக்கான இடத்தைக் கொடுப்பது, அவர்களின் கவலைகளைக் கேட்பது, ஒப்புக்கொள்வது, மற்றவர்களை (நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள்) ஈடுபடுத்துவது அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். உடன் இருப்பவர்களின் சொந்த உடல் / மன ஆரோக்கியத்தைக் கவனிப்பதும் முக்கியமாகும்.

மனத்தைப் பேணுவோம்

ஒருவரின் எண்ணங்களும் செயல்களும் உணர்ச்சிகளும் தன்னையும், பிறரையும் பாதிக்காத அளவுக்கு இருக்குமேயானால், அதுதான் சிறந்த மனநலம். அதைப் பேணுவதும் போற்றிப் பாதுகாப்பதும் அவசியம். அதில் பிரச்சினை ஏற்பட்டால், மனநலம் பாதிக்கப்படும், பல விளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும். எனவே, விழிப்புணர்வு பெறுவோம், மனநலம் காப்போம், மனித இனம் வளர்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x