Published : 14 Oct 2014 12:33 PM
Last Updated : 14 Oct 2014 12:33 PM

காதில் ஓயாத இரைச்சல் தொல்லை

எனக்குக் காதில் எப்போதும் ஒரு முழக்கம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வு என்ன?

விஸ்வநாதன், செங்கல்பட்டு

காதில் கேட்கும் முழக்கத்துக்கு tinnitus என்று பெயர். வெளியில் சத்தம் இல்லாதபோது காதின் உட்புறத்தில், இது கேட்கும். இது மென்மையாகவோ, ஓசை அதிகமுள்ளதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மணி அடிப்பதைப் போன்றோ, சங்கு ஊதுவதைப் போன்றோ, கடல் அலையைப் போன்றோ, ஹார்ன் ஒலிப்பதைப் போன்றோ, பறவைகளின் ஒலியைப் போன்றோ, விசில் சப்தம் போன்றோ கேட்கலாம்.

சில நேரம் காதுக்குள் காற்று அடைத்தது போன்றும், தண்ணீர் ஓடுவது போன்றும்கூட இருக்கும். இப்படிப் பலருக்கும் இருக்கிறது. சிலருக்கு ஒரு சில நிமிடங்களே இருக்கும். தொடர்ந்து இப்படி இருந்தால் கவனம் செலுத்த முடியாது, தூங்க முடியாது.

காரணம் என்ன?

செவி அழற்சியின் காரணமாகவும், செவியில் மெழுகு அடைவதாலும் அதிக ஓசையுடைய ஒலிகளைக் கேட்பதால் ஏற்படும் செவி மந்த நிலை காரணமாகவும், meniere's disease என்று சொல்லக்கூடிய உள்செவிப் பிரச்சினை காரணமாகவும் இது வரும்.

இந்த meniere's நோயில் காதில் முழக்கம், செவித் திறன் குறைவு, தலை சுற்றும் தன்மை, வாந்தி போன்றவை காணப்படலாம். மது அருந்துதல், அதிகக் காபி குடித்தல், மாத்திரைகள் காரணமாகவும் இது ஏற்படலாம்.

செவித் திறன் குறைவாக இருக்கிறதா என்றும், ரத்தஅழுத்தம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். மூளையை ஸ்கேன் எடுத்துக் கட்டிகள் உள்ளனவா என்றும், ரத்தநாளக் கட்டிகள் உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும். இரவு நேரம் இப்படிக் கேட்கலாம். இரவு நேரத்தில் புறச் சூழல் அமைதியாக உள்ளதால் இதை நாம் தெளிவாக உணர முடியும்.

ஆயுர்வேத மருந்துகள்

காதில் முழக்கம் ஏற்படுவதை ஆயுர்வேதத்தில் கர்ணநாதம் என்று சொல்வார்கள். ஆகாச வாயு தத்துவத்தாலும், சப்தக் குண ஸத்வம் அதிகரிப்பதாலும் இது வருகிறது. உட்காது பாதிப்பினாலேயே இது அதிகம் வருகிறது. இந்த நோயில் வாதத்தைத் தணிக்கிற மருந்துகள் மிகவும் முக்கியம்.

தலைக்கு லாக்ஷாதி தைலம், க்ஷீரபலா தைலம், தான்வந்தர தைலம் போன்றவை சிறந்தவை. இரவு கல்யாணக கிருதம் 20 மி.லி., 1/2 ஸ்பூன் இஞ்சி சூரணம் சேர்த்துச் சாப்பிடலாம். ஜீரக சூரணம், சிருங்கப்பேராதி சூரணமும் 5 கிராம் முசுமுசுக்கை கஷாயத்தில் கலந்து கொடுக்கலாம்.

வசா லசுனாதி தைலம் என்றொரு தைலம் இருக்கிறது. காதில் நீர் ஏதும் இல்லாதபோது 1 துளி விடலாம். முருங்கை இலை, வெள்ளைப்பூண்டு கஷாயம் சாப்பிடலாம். கண்டுபாரங்கி என்றொரு பொருள் இருக்கிறது. இது காது முழக்கத்துக்குச் சிறந்த மருந்து. காதில் சீழ் வடிந்தால், அந்நிலையில் எண்ணெய் ஊற்றக் கூடாது. இது அல்லாமல் நடைமுறையில் பயன்படுத்தும் கைமருந்துகளைப் பார்க்கலாம்.

கைமருந்துகள்

# தேங்காய் எண்ணெய், வெள்ளை வேளைகீரை, நாயுருவி வேர், பொரித்த பெருங்காயத் தூள், பூண்டு பொடியைத் தேனுடன் சாப்பிடலாம்.

# தூதுவளையை நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரைக் குடிக்கலாம்.

# தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டிக் கசக்கிச் சாறு பிழிந்து அதில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் சப்தம் ஆகியவை குறையும்.

# நல்லெண்ணெயில் ஒரு கிராம்பைப் போட்டுச் சூடு செய்து, பின் அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை வலி உள்ள காதில் 2 துளி விடலாம்.

# முள்ளங்கிக் கிழங்கின் சாறு 50 மி.லி.யில், இஞ்சி 3 கிராம் சேர்த்துச் சாப்பிடலாம்.

# தும்பைப்பூ, சுக்கு, காயம் ஆகியவற்றைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.

# தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றைத் தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

# கடுகை நன்கு அரைத்து, அதைக் காதுக்குப் பின்னால் பற்று போட்டு வைக்கலாம்.

# பூண்டின் தோலை உரித்துத் தலைப் பக்கம் கிள்ளிவிட்டுக் காதில் வைக்கலாம்.

# தேனுடன் துளசிச் சாற்றைக் கலந்து குடிக்கலாம்.

# வேளைக்கீரை இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, இரண்டு சங்களவு சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு அதே அளவு நல்லெண்ணெயைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை காதுக்கு 2 துளி வீதம் விட்டுப் பஞ்சடைத்து வந்தால் காது இரைச்சல் குணமாகும்.

# அரிசித் தவிடு எடுத்து ஒரு கைக்குட்டையளவு துணியில் கட்டி ஓடு (உடைந்த ஒட்டை) அடுப்பில் போட்டுச் சுட்டு அதைத் தவிட்டுடன் வைத்துக் கட்ட வேண்டும். ஓட்டில் உள்ள சூடு கைக்குட்டையளவு போகும். காதைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப் பலன் கிடைக்கும்.

# வெள்ளைப் பூண்டு, மிளகு இரண்டையும் இடித்துத் துணியில் வைத்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். ஒரு துளி காதில் விட, முதலில் எரியும். பின் குளிர்ந்துவிடும்.

# கடல் நுரை வாங்கி வந்து, வேப்பெண்ணெயில் இட்டுக் காய்ச்சி, இளஞ்சூட்டோடு சில துளி காதில் விடலாம்.

# தைவளை இலையை இடித்துச் சாறெடுத்து நல்லெண்ணெய் கலந்து சூடேற்றிக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி காதில் இரண்டு சொட்டு விடலாம்.

காதில் ஓசையை நிறுத்த சில யோசனைகள்

# காபி, டீ குடிப்பதை நிறுத்துவது நல்லது

# அதிக ஓசையுள்ள இடங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம்

# தலை அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# காதில் செவித் திறன் அறியும் பரிசோதனை (audiometry test), தலைக்கு MRI போன்றவற்றை நவீன மருத்துவர்கள் பார்ப்பார்கள்.

# காதில் அழுக்கு இருந்தால் அதை எடுப்பார்கள்.

# ஒருசிலருக்குக் காது கேட்கும் இயந்திரத்தைப் பொருத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x