

ஒரு பள்ளியின் பொன் விழாக் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கான விழாவுக்கு ஆட்சியர் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறார். அதனால், அந்தக் கொண்டாட்டங்களுக்கு அந்தப் பள்ளி தயார் ஆகிக்கொண்டிருக்கிறது.
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவன் ஆதவன். பேச்சு, நடனம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ந்தவன். அந்தப் பொன் விழாவின் சிறப்பம்சமாக விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மன் குறித்த நாடகம் அரங்கேற இருக்கிறது.
இதில் கட்டபொம்மனாக நடிக்க ஆதவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அதற்காக நிறைய மெனக்கெடுகிறான். ஒவ்வொரு நாளும் மெருகேறிவரும் ஆதவனின் நடிப்புத் திறமையைப் பார்த்துக் கலை ஆசிரியர் அறிவழகன் திகைத்துப் போகிறார்.
எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், நாடகம் அரங்கேற சில நாள்கள் மட்டுமே இருக்கும்போது ஒரு பிரச்சினை உருவாகிறது.
அதன் காரணமாக அந்த நாடகத்தின் மையமாக, அந்த நாடகத்தைத் தாங்கி நிற்கும் ஆதவன், கட்ட பொம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தானா, இல்லையா என்பதை இந்தக் கதை சொல்கிறது.
நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு விஷயத்தை, அவர்கள் நேரடிக் காரணமாக இல்லாதபோதும் இதற்காகக் குழந்தைகளை அவமதிக்கும் விஷயத்தை கதையாக்கி இருக்கிறார் பால சாகித்ய விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன்.
பெற்றோர், குழந்தைகள், ஆசிரியர்கள் அதிகம் உறவாடும் இந்தக் கதையில் நம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான உள்ளடக்கத்தை இந்த நூல் பேசுகிறது. அது சுவாரசியமான கதையாக உருவாகி இருப்பதுடன், தேர்ந்த மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.
இடம்,
விஷ்ணுபுரம் சரவணன்,
சால்ட் வெளியீடு,
தொடர்புக்கு: 89394 09893