Last Updated : 31 May, 2017 11:39 AM

 

Published : 31 May 2017 11:39 AM
Last Updated : 31 May 2017 11:39 AM

தினுசு தினுசா விளையாட்டு: கூட்டுக்குள்ளே குருவி!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப் போகிறது. ‘அச்சச்சோ… அதுக்குள்ளே லீவு முடிஞ்சிருச்சே’ என்று சிலருக்கு வருத்தமாகவும், ‘அய்… பள்ளிக்கூடத்துல புது வகுப்பறைக்குப் போகலாம். நண்பர்களைப் பார்க்கலாம். புதுப் புத்தகம் வாங்கலாம்’ என்று நிறைய பேர் சந்தோஷமாகவும் இருப்பார்கள்.

விடுமுறையில் எப்படி உற்சாகமா விளையாடினீர்களோ அதே உற்சாகத்தோடு பள்ளிக்கூடம் திறந்த பிறகும் நீங்கள் விளையாடலாம். ஆனால், அதுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி நீங்கள் விளையாட வேண்டும், சரியா? ‘கூட்டுக்குள்ளே குருவி’ இதுதான் இந்த வாரம் நாம் விளையாடப்போகும் விளையாட்டு.

எப்படி விளையாடுவது?

1. இந்த விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள் வரை விளையாடலாம். முதல் போட்டியாளர் தவிர விளையாடும் மற்றக் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மூன்றாக இருக்க வேண்டும், சரியா?

2. வழக்கம்போல், ’உத்தி பிரித்தல்’ மூலமாக முதல் போட்டியாளரைத் தேர்வுசெய்துகொள்ளுங்கள்.

3. பிறகு, அனைத்துக் குழந்தைகளையும் ‘சாட் பூட் திரி’ போடச் சொல்லி, குழுவுக்கு மூன்று குழந்தைகள் வீதம் பிரித்துக்கொள்ளுங்கள்.

4. எல்லாக் குழந்தைகளும் வட்ட வடிவில் நில்லுங்கள். முதல் போட்டியாளர் வட்டத்தின் நடுவில் நிற்க வேண்டும்.

5. மூன்று பேர் கொண்ட ஒவ்வொரு குழுவிலும், நடுவில் இருப்பவர்தான் குருவி. குருவிக்கு வலது, இடது பக்கத்தில் நிற்பவர்கள் குருவியின் கூடு.

நடுவில் நிற்கும் குருவியின் தலைக்கு மேலே இரு புறமும் நிற்பவர்கள் கைகளை உயர்த்திக்கொள்ளுங்கள். பிறகு ஒன்றாகச் சேர்த்துக் கூடுபோல் நின்றுகொள்ளுங்கள்.

6. முதல் போட்டியாளர், “குருவியக்கா… குருவியக்கா... எங்கே போறீங்க” என்று கேட்க, வட்டத்திலிருக்கும் எல்லோரும் சேர்ந்து “பசிக்கு இரையெடுக்கக் காட்டுக்குப் போறேன்” என்று சொல்லுங்கள்.

7. மீண்டும், “குருவியக்கா… குருவியக்கா… எங்கே போறீங்க..?” என்று முதல் போட்டியாளர் கேட்பார். “குஞ்சுகளைப் பார்த்து வர என் கூட்டுக்குப் போறேன்” என்று பதிலுக்குச் சொல்லுங்கள்.

8. இப்போது, முதல் போட்டியாளர், ‘குருவி’, ‘கூடு’ என்று இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைச் சொல்வார். அவர், ’குருவி’ என்று சொன்னால், வட்டத்தில் குருவியாக நிற்பவர்கள் இடம் மாறி, வேறொரு கூட்டுக்குச் செல்ல ஓடுங்கள். அந்த நேரத்தில், முதல் போட்டியாளர் ஏதாவது ஒரு கூட்டுக்குச் சென்று குருவியாக நின்று விடுவார்.

9. இப்போது யார் ஒருவருக்கு ’கூடு’ கிடைக்கவில்லையோ அவர் ’அவுட்’. அவரே முதல் போட்டியாளராக மாறிவிடுவார்.

10. ஒரு வேளை முதல் போட்டியாளர் ‘கூடு’ என்று சொன்னால், குருவிகள் எங்கும் செல்லாமல் அப்படியே நில்லுங்கள். இருபுறமும் கூடாக நிற்பவர்கள் பிரிந்து சென்று, வேறுவேறு குருவிகளுக்குக் கூடாக மாறி நிற்க வேண்டும். முதல் போட்டியாளர் ஓடிப்போய், யாருடனாவது பாதி கூடாக நின்றுவிடுவார். இதில், ‘அவுட்’ ஆகும் ஒருவரே, மீண்டும் முதல் போட்டியாளராகி விளையாடுவார்.

11. முதல் போட்டியாளர் எதைச் சொல்கிறாரோ, அதுவாகவே அவர் மாறி நிற்க வேண்டும். மற்றவர்கள் குருவியாகவும், கூடாகவுமே தொடர்ந்து விளையாடலாம்.

விளையாடும் இடம் முழுக்கக் கலகலப்பை உண்டாக்கும் இந்த விளையாட்டும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x