

‘கொப்பாட்டும்’ என்கிற பெயர் உங்களுக்குப் புதிதாக இருக்கும். இது ஒரு பர்மாக்காரரின் பெயர். அவர் மிகவும் கெட்டிக்காரர். பிறரை எப்படி ஏமாற்றுவது, பிறருடைய பொருளை எப்படி எடுத்துக்கொள்வது போன்ற வழிகளிலேயே தமது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிவந்தார்.
அவருக்குச் சொந்தமாகப் பத்துப் படகுகள் இருந்தன. அந்தப் படகுகள் ஐராவதி நதியில் ஓடிக்கொண்டிருக்கும். அடிக்கடி மரம், நெல் மூட்டை முதலியவற்றை ஏற்றிக்கொண்டு கீழ் பர்மாவிலிருந்து மேல் பர்மாவிற்கும், மேல் பர்மாவிலிருந்து கீழ் பர்மாவிற்கும் செல்லும். அந்தப் படகுகளை ஓட்டுவதற்குப் பத்துப் படகோட்டிகள் இருந்தார்கள். அவர்களுக்கான கூலியைக்கூட நியாயமாக வழங்க மாட்டார் கொப்பாட்டும்.
“உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூலி தர முடியாது. 24 மணி நேரமுமா படகோட்டிக் கொண்டிருந்தீர்கள்? இரவில் தூங்கிய 8 மணி நேரத்திற்கு நான் கூலியைக் குறைத்துக்கொண்டுதான் கொடுப்பேன்” என்று கொப்பாட்டும் சொல்லிவிடுவார். படகோட்டிகளுக்கு வேறு வழியில்லாததால் கொடுத்த கூலியை வாங்கிக்கொள்வார்கள். சாமான்களை ஏற்றிக்கொண்டு படகு செல்லும்போது, கொப்பாட்டும் கூடவே போவார்.
ஒவ்வொரு நாள் இரவிலும் படகுகளை ஏதாவது ஒரு கிராமத்தின் அருகே உள்ள கரையில் நிறுத்திவைப்பார்கள். அப்போது படகோட்டிகளிடம் ஏதாவது பந்தயம் கட்டுவார். பந்தயத்தில் அவர்களைத் தோற்கடிக்கப் பார்ப்பார். அவர்கள் தோல்வி அடையாவிட்டால், ஏதாவது வம்பு பேசி தோற்றுவிட்டதாகச் சொல்லிவிடுவார். அவருடைய குணம் நன்றாகத் தெரிந்திருந்ததால், பந்தயம் என்றாலே அவர்கள் பயந்து ஓடுவார்கள்.
அன்று கிராமத்தின் அருகே உள்ள கரையில் தங்கியிருந்தார்கள். அப்போது ஜனவரி மாதம், நல்ல குளிர். தண்ணீரில் கையை வைத்தால் பனிக்கட்டி போல் ‘ஜில்’லென்று இருந்தது. கொப்பாட்டும், “படகோட்டிகளே, உங்கள் பலத்தைச் சோதிக்கலாமா? சிறு துணியை மட்டும் கட்டிக்கொண்டு இந்தத் தண்ணீரில், சூரியன் உதயமாகும் வரை இருக்க வேண்டும். அப்படி இருப்பவருக்கு இரண்டு மடங்கு கூலி தருகிறேன்.
யார் தயார்?” என்று கேட்டார். ஒருவரும் பதில் சொல்லவில்லை. கொப்பாட்டும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது புதிதாகச் சேர்ந்த படகோட்டி, தான் தண்ணீருக்குள் இறங்குவதாகச் சொன்னார்.
"கொப்பாட்டும் குணம் தெரியாமல் காரியத்தில் இறங்காதே” என்றார் ஒரு படகோட்டி. "அதெல்லாம் முடியாது. பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டார். அவர் உடனே தண்ணீரில் இறங்க வேண்டியதுதான்" என்று கத்தினார் கொப்பாட்டும். புதிய படகோட்டி சிறிதும் தயங்க வில்லை. சிறு துணியைக் கட்டிக்கொண்டு நதியில் இறங்கிவிட்டார். இரவு முழுவதும் பல்லைக் கடித்துக்கொண்டு தண்ணீருக்குள்ளேயே இருந்தார்.
கொப்பாட்டும் கண்விழித்துப் பார்த்தார். ‘என்ன, இரண்டு பங்கு கூலி வாங்கிவிடுவார் போலிருக்கே... எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டார். கிராமத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தார். பிறகு, தண்ணீருக்குள் இருக்கும் படகோட்டியைப் பார்த்தார். “நீ இவ்வளவு குளிரிலும் இந்தத் தண்ணீருக்குள் கவலையில்லாமல் எப்படி இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்?" என்று கேட்டார்.
படகோட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே?’’ என்று கேட்டார். “அதோ பார், அங்கே நெருப்பு ‘குபுகுபு’ என்று எரிந்து கொண்டிருக்கிறது. அந்த உஷ்ணம் உன் மேல்படுகிறது. அதனால்தான் இந்தக் குளிரிலும் இவ்வளவு தைரியமாக நீ உள்ளே இருக்கிறாய்" என்று கூறினார் கொப்பாட்டும். எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தனர். அரை மைல் தூரத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருப்பது தெரிந்தது. செம்படவர்கள் மீன் பிடிக்கப் போவதற்கு முன்னால் குளிர்காய்வது வழக்கம். மட்டைகளையும் இலை களையும் வைத்து எரிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் கொப்பாட்டும் அப்படிக் கூறினார்.
“நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே... நெருப்பு எங்கோ எரிகிறது, நான் இங்கே இருக்கிறேன்! எப்படி அந்த உஷ்ணம் என் மேல் படும்?"
"அதெல்லாம் இல்லை. அந்த உஷ்ணம் உன் மேல் படுவதால்தான், உன்னால் இந்த நேரத்திலும் இப்படி இருக்க முடிகிறது. இல்லாவிட்டால் யாரால் இருக்க முடியும்?" என்று அநியாயமாகப் பேசினார் கொப்பாட்டும். படகோட்டி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பலன் இல்லை; பேசாமல் எழுந்து வெளியே வந்துவிட்டார். சிறிது நேரம் யோசித்தார்.
பிறகு, "நான் இதில் தோற்றுப்போனது உண்மைதான். இப்படி எத்தனையோ தடவை நான் தோற்றுப் போயிருக்கிறேன். ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் என்னைத் தோற்கடிக்கவே முடியாது" என்று மற்ற படகோட்டிகளிடம் சத்தமாகச் சொன்னார் புதிய படகோட்டி.
“என்ன! முடியாதா? அது என்ன விஷயம்?” என்று கொப்பாட்டும் ஆத்திரத்துடன் கேட்டார்.
“இரண்டு நாள் முன்பு, நான் இறைச்சி வறுவல் செய்திருந்தேன். அது எப்படி இருந்தது? அதேபோல் அரை மணி நேரத்துக்குள் வறுவல் செய்ய உங்களால் முடியுமா? முடியவே முடியாது!" என்றார் படகோட்டி. "ஏன் முடியாது? என்ன பந்தயம்?’’ என்று கேட்டார் கொப்பாட்டும்.
“நான் தோற்றுப் போனால், உங்களிடம் ஏழு வருஷம் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறேன். நீங்கள் தோற்றுப் போனால், உங்களுடைய பத்துப் படகுகளையும் எனக்கே தந்துவிட வேண்டும்."
"நீ வாக்குத் தவறக் கூடாது. சரி, நெருப்பு எங்கே?" என்று கேட்டார் கொப்பாட்டும். "நெருப்பா! அது எதற்கு? அதுதான் அதோ, அங்கே தெரிகிறதே! இங்கிருந்து கொண்டே அந்த வெப்பத்தில் வறுவல் செய்யலாம்" என்று தூரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பைக் காட்டினார் படகோட்டி.
"அது எப்படி முடியும்? நெருப்பு எங்கோ இருக்கிறது... நாம் இங்கே இருக்கிறோம். அந்த நெருப்பில் எப்படிச் சமைக்க முடியும்?" என்று கேட்டார் கொப்பாட்டும்.
"ஏன் முடியாது? அந்த வெப்பம் இங்கு நன்றாகப்படுவதாக நீங்கள்தானே சொன்னீர்கள்! அப்படி என்றால் நீங்கள் தாராளமாகச் சமைக்கலாமே..." என்றார் படகோட்டி. கொப்பாட்டுமுக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. மற்ற படகோட்டிகள் சேர்ந்து கொப்பாட்டுமின் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்கள். பத்துப் படகுகளையும் படகோட்டியிடம் கொடுக்கும்படி ஆகிவிட்டது.
அந்தப் படகோட்டி மற்ற படகோட்டி களுக்கு ஆளுக்கு ஒரு படகாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார்! இப்போது, ஒவ்வொரு படகோட்டியும் ஒரு படகுக்குச் சொந்தக்காரர்!
ஓவியம்: நடனம்
வெளியீடு: வேட்டை நாய்,
பாரி நிலையம்