Published : 16 Feb 2022 06:34 AM
Last Updated : 16 Feb 2022 06:34 AM

கடலுக்கு அடியில் ரத்தம் பச்சையாகத் தெரிவது ஏன்? - டிங்குவிடம் கேளுங்கள்

கடலுக்கு அடியில் ரத்தத்தைப் பார்த்தால் பச்சை நிறமாகத் தெரிவது ஏன், டிங்கு?

- மெல்பின், 9-ம் வகுப்பு, விக்னேஷ் வித்யாலயா, கூத்தூர், திருச்சி.

ரத்தம் நிறம் மாறுவதில்லை. நீரில் ஒளிதான் நிறம் மாறுகிறது. சூரியனிலிருந்து வரும் வெள்ளை ஒளியில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, வயலட் போன்ற நிறங்கள் சேர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்டுள்ளது. நீருக்குள் ஒளி செல்லும்போது குறைவான அலைநீளம் கொண்ட சிவப்பு வண்ணம் தண்ணீரால் முதலில் வடிகட்டப்படுகிறது. அதனால், நம் கண்களுக்குச் சிவப்பு நிறம் தெரிவதில்லை. அதற்கடுத்த அலைநீளம் கொண்ட பச்சை நிறம் தெரிகிறது. இன்னும் ஆழத்துக்குச் சென்றால் பச்சை வண்ணமும் தெரியாது. ரத்தம் கறுப்பு வண்ணமாகத் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வரும்போது பச்சை, பழுப்பு, இளஞ்சிவப்பு, சிவப்பு என ரத்தத்தின் நிறம் நம் கண்களுக்குத் தெரியவரும், மெல்வின்.

கொசு ரத்தம் குடிக்க மனிதர்களைக் கடிக்கிறது. எறும்பு எதற்காக மனிதர்களைக் கடிக்கிறது, டிங்கு?

- ஜெ. அருள், 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

எறும்புகள் மனிதர்களைத் தேடி வந்து கடிப் பதில்லை. அவை ஓர் ஓரமாகத் தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. சில நேரம்தமக்கோ தம் புற்றுக்கோ ஆபத்து என்று நினைக்கும் போது, தற்காத்துக்கொள்வதற்காகவே எறும்புகள் மனிதர்களைக் கடிக்கின்றன, அருள்.

நெருப்பில் பொசுக்கினாலும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை எந்த நாட்டில் இருக்கிறது, டிங்கு?

- ஆர்.எம். ஜெயந்தி, 5-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர், கோவை.

இறந்த உயிரினம் இதுவரை மீண்டும் உயிருடன் வந்ததில்லை. பீனிக்ஸ் என்பது கற்பனையான பறவை. கிரேக்க, எகிப்திய, கிறிஸ்தவப் புராணங்களிலும் கதைகளிலும் பழங்காலத்திலிருந்தே இந்தப் பறவை இடம்பெற்றிருக்கிறது. மரணமில்லாத தன்மையையும் மறுபிறப்பையும் குறிப்பிடுவதற்காகப் பலரும் பீனிக்ஸ் பறவையை இன்றும் உதாரணமாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கற்பனை பறவை எவ்வளவு காலம் கடந்தும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது தானே, ஜெயந்தி!

நாய்க்கு வெறி பிடிப்பது ஏன், டிங்கு?

- பா. நாராயணன், 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, பேராவூர், ராமநாதபுரம்.

ரேபிஸ் என்கிற வைரஸ் கிருமியால் நாய் தாக்கப்படும்போது, மூளையில் அழற்சி ஏற்படுகிறது. இதனால், நாய்க்கு வெறி பிடிக்கிறது, நாராயணன். நாய் மட்டுமல்ல; ஆடு, மாடு, பூனை, குதிரை போன்ற வீட்டு விலங்குகள், வெளவால், நரி, ஓநாய் போன்ற காட்டு விலங்குகளும் ரேபிஸ் வைரஸால் தாக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் பிற விலங்குகளையோ மனிதர்களையோ கடிப்பதால், கடிபட்டவர்களும் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இது உயிர் பறிக்கும் நோய் என்பதால், வீட்டு விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுவிடுவது நல்லது. விலங்குகளால் கடிபட்டவர்கள் உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், உயிர் பிழைத்துவிட முடியும். ரேபிஸ் தாக்கப்பட்ட நாய், பத்து நாட்களில் இறந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x