Published : 31 Jul 2019 11:19 AM
Last Updated : 31 Jul 2019 11:19 AM

இந்தப் பாடம் இனிக்கும் 05: இயற்கை மந்திரவாதி

தாகம் எடுத்தால் குடிக்கும்போது, கை கழுவும்போது, குளிக்கும் போது, மழை பெய்யும்போது என எப்போது உடலில் தண்ணீர் பட்டாலும் குளிர்ச்சியாக இருக்கிறது, இல்லையா? இப்படிக் குளிர்ச்சியாக இருப்பதால்தான், அதற்குத் தண்ணீர் என்று பெயர் வந்தது. ‘தண்’ என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம்.

பெருவெடிப்பு எனும் அறிவியல் நிகழ்வின் வழியாகச் சூரியக் குடும்பத்தின் உறுப்பினர்கள் பிறந்தார்கள். பிறந்தபோது பெரும் நெருப்புப் பிழம்பாக இருந்த பூமி, பெருமழை பெய்துகொண்டே இருந்ததால் குளிர்ந்தது. 

அப்போது எவ்வளவு தண்ணீருடன் உருவானதோ, அதே அளவு தண்ணீர்தான் இன்று வரைக்கும் பூமியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. புதிதாக வேறு தண்ணீர் உருவாகவில்லை. பூமிக்கு வெளியே நிலவிலும் வேறு கோள்களிலும் நடந்த ஆராய்ச்சிகளில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

இப்படி பூமியை உருவாக்கிய, பூமி பயன்பாட்டுக்கு உரிய ஒன்றாக, உயிரினங்கள் - மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக இருப்பதற்குக் காரணம் தண்ணீர். இயற்கையை-பூமியைக் கட்டமைக்கும் அடிப்படை அம்சங்களான ஐம்பூதங்களில் ஒன்றாகத் தண்ணீர் திகழ்கிறது.

கரைத்துவிடுவேன்!

உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களைக் கரைக்கக்கூடியது தண்ணீர். வேறு எந்தத் திரவத்தைவிடவும், அதிகமான திடப்பொருள்கள் தண்ணீரில்தான் கரைந்து போகின்றன.

தூய்மையான அல்லது பரிசுத்தமான தண்ணீர், அதாவது எந்தப் பொருளுமே சிறிதளவுகூட கலக்காத தண்ணீர் இயற்கையில் எங்குமே கிடைப்பதில்லை. மழைத் தண்ணீர் சுத்தமானது என்று கூறப்பட்டாலும், அதிலும்கூட சில வேதிப்பொருட்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளன. 

அதேநேரம் ஆரோக்கியமற்ற, ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள, கழிவு-நச்சு கலந்த தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கிறது. சாக்கடைகளில் ஓடும் தண்ணீர் அல்லது சாக்கடைகளாக நாம் மாற்றிவிட்ட ஆறுகளில் ஓடும் தண்ணீர் இந்த வகைப்பட்டது.

மூன்று அவதாரம்

சாதாரணமாகத் தண்ணீர் திரவ வடிவில் இருக்கிறது. குளிர்பதனப் பெட்டியின் உறையநிலைப் பகுதியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால், அது கெட்டிப்பட்டு ஐஸ்கட்டியாகி விடுகிறது. இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை வேக வைக்க சட்டியில் தண்ணீரை ஊற்றுகிறோம். சூடுபடுத்திய பிறகு அந்தப் பாத்திரங்களைத் திறந்தால் நீராவியாகத் தண்ணீர் மாறியிருக்கிறது.

இயல்பான வெப்பநிலையில் திரவமாக இருக்கிறது. குளிர வைத்தால் கட்டியாகி திட நிலைக்குச் சென்றுவிடுகிறது. வெப்பத்தில் ஆவியாகி காற்றில் ஈரப்பதமாக உலா வருகிறது. இப்படி எல்லா வடிவத்துக்கும் தண்ணீர் தன்னையே உருமாற்றிக் கொள்கிறது. இயற்கையில் மூன்று இயற்பியல் வடிவங்களிலும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது தண்ணீர் ஒரு மாயாஜாலப் பொருளாகத் தோன்றுகிறது.

தண்ணீர் கொடுக்கும் உயிர் 

தண்ணீர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் நிலையில், ஏதாவது ஒரு வேலையை நம்மால் நன்றாகச் செய்ய முடியுமா? வெயிலில் அலைந்துவிட்டுத் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியுமா? முடிவதில்லை. தண்ணீர் குடித்தால்தான் இதமாக உணர முடிகிறது. 

உண்ணாவிரதம் இருப்பவர்கள்கூட, தண்ணீர் குடிக்காமல் இருப்பதில்லை. ஏனென்றால் நமது உடலைக் கட்டமைப்பதில் 60 சதவீதம் பங்களிப்பது தண்ணீர்தான். சராசரியாக 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது. நம்மைப் போலவே தாவரங்களும் தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. ஒரு நாள் தண்ணீர் விடவில்லை என்றாலும் வெயிலில் வாடி வதங்கும் தாவரங்கள் உயிர்ப்பற்றுப் போய்விடுகின்றன. தண்ணீர் விட்டதும் புத்துணர்ச்சி பெற்றுவிடுகின்றன.

குளத்திலும் ஆற்றிலும் நிறைய மீன்களைப் பார்க்கலாம். தண்ணீர் இல்லாமல் மீன்களால் வாழ முடியாது. இப்படி நமக்கு மட்டுமில்லாமல் தாவரம், மீன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் உயிர் தருவது தண்ணீர்தான். 

உயிரளிக்கும் மந்திரவாதியாகத் தண்ணீர் திகழ்கிறது. ஆனால், இந்த மந்திரவாதியையே காணாமல் போகச் செய்யும், வீணாக்கும், சாக்கடையாக்கிவிடும் திறமை மனிதர்களுக்கான நமக்கு மட்டும்தான் இருக்கிறது. இந்த இயற்கை மந்திரவாதி காணாமல் போனால் நஷ்டம் வேறு யாருக்குமில்லை, மனிதர்களான நமக்குத்தான்.

மறைந்திருக்கும் தண்ணீர் 

நாம் சாப்பிடும் பொருட்கள், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மறைந்திருக்கிறது. அதாவது அந்தப் பொருளின் உருவாக்கத்தில் பங்களித்திருக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சராசரியாக 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 100 கிராம் சாதம் சாப்பிடுகிறோம் என்றால், 250 லிட்டர் தண்ணீரையும் சேர்த்தே செலவழிக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த வாரம்

ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘உயிருக்கு வேர்’ என்ற இயலின்கீழ் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற உரைநடை உலகம் பகுதி.

- ஆதி, தொடர்புக்கு:valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x