நிகோலஸ் கோபர்நிகஸ் | விஞ்ஞானிகள் - 28

நிகோலஸ் கோபர்நிகஸ் | விஞ்ஞானிகள் - 28
Updated on
1 min read

மருத்துவர், நீதிபதி, வானியலாளர், கணிதவியலாளர், மத போதகர் எனப் பல்வேறு துறைகளில் நிபுணராக விளங்கினார் நிகோலஸ் கோபர்நிகஸ். போலந்து நாட்டில் 1473, பிப்ரவரி 19இல் பிறந்தார். வசதியான வணிகக் குடும்பம். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். மாமாவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

1491இல் கிராக்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குதான் கோபர்நிகஸுக்கு வானியல் அறிமுகமானது.1494இல் இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அங்குதான் அவர் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் நோவாராவைச் சந்தித்தார். அவர்தான் இத்தாலியின் கணித ஜோதிடர். வருட பலனைக் கணித்துச் சொல்வார். அரண்மனை, இதர முக்கியக் குழுக்களிடம் செல்வாக்குப் பெற்றவர். அவருடன் கோபர்நிகஸ் தங்கினார். நோவாராவை குருவாக ஏற்றுக்கொண்டார் கோபர் நிகஸ். இருவரும் சேர்ந்து இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்தனர்.

டாலமியின் புத்தகங்களை நோவோரா அறிமுகம் செய்து வைத்தார். அதில்தான் அரிஸ்ட்டாட்டில் அறிமுகமானார். கோப்பர் நிக்கஸ் பல மொழிகளைக் கற்றார். அதனால் வானியல் தொடர்பான பல புத்தகங்களைப் படிக்க அந்த மொழி அறிவு உதவியது.

மாமாவின் விருப்பப்படி கத்தோலிக்க மத போதகரானார். வானியல் மீதான ஆர்வம் குறையாமலிருக்க அந்தப் பதவி உதவியது. கிடைத்த ஓய்வு நேரத்தை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தினார். வானத்தைக் கவனித்து அதன் இயக்கத்தைக் குறிப்பெடுத்துக் கொண்டார். நீண்ட ஆய்வின் முடிவில் சூரியனை மையமாக வைத்துதான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன. அதில் பூமியும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்தார்.

கோபர்நிகஸின் கருத்தை யாரும் ஏற்கவில்லை. மதவாதிகளும் வானியலாளர்களும் எதிர்த்தனர். ஆனால், ஒரு சில வானியலாளர்கள் கோபர்நிகஸின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தனர். கோள்கள் சுற்றிவருவதும், நாம் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதையும் சரி என்று நிரூபித்தனர்.

சட்டம் படித்ததற்காக போலந்தின் வார்மியாவில் நீதி அரசரானார். அந்தப் பதவியில் இருந்தும் வானியல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கோள்களின் பின்னோக்கிய இயக்கத்தைக் கண்டறிந்தார். பூமியின் சுழற்சிதான் சூரிய உதயத்திற்கும் மறைவுக்கும் காரணம். நட்சத்திரங்களின் இயக்கத்திற்கும் காரணம் என்றார். பருவங்களின் சுழற்சியும் அதனால்தான் ஏற்படுகிறது என்றார் கோபர் நிகஸ். இறுதியாக சூரிய மண்டலத்தின் மாதிரியையும் கோள்களின் பாதையையும் வகுத்தார்.

’On the Revolutions of the Heavenly Spheres ’ என்கிற ஆறு தொகுதிகள் கொண்ட புத்தகத்தை எழுதினார். புத்தகத்தின் கோட்பாடு அசாதாரணமாக இருந்தாலும், அது வானியலாளர்களின் கணக்கீடுகளுக்கு உதவியாயிருக்கும் என்று ஒரு குறிப்பையும் சேர்த்திருந்தார். அதனால் திருச்சபை புத்தகத்தை வெளியிட்டது. நிகோலஸ் கோபர்நிகஸ் 70வது வயதில் 1543, மே 24 அன்று பக்கவாதத்தால் மறைந்தார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

முந்தைய அத்தியாயம் > ஜான் டால்டன் | விஞ்ஞானிகள் - 27

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in