

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு எப்போதும் அது தனித்த அனுபவத்தையும் மனதுக்குள் குதூகலத்தையும் அளிக்கும். இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
இளைஞர்கள் எப்போதும் புதிதாக வருபவர்களுக்கு வாக்களிப்பார்கள். அப்படி வாய்ப்பு அளிப்பது அவர்களுடைய விருப்பம்.
எப்போதும் ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வலிமையான ஓர் எதிர்க்கட்சி இருப்பது நல்லது. என்னைப் பொறுத்தவரை நலத்திட்டங்களையும் வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யக் கூடியவர்களுக்கு வாக்களிப்பேன்.
என் நண்பர்கள் சிலர் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். ‘நோட்டா’வுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்கத் தேவையில்லை. பெண்கள் பாதுகாப்பு, ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் போன்றவற்றை அரசு உறுதிசெய்ய வேண்டுமென்பது என் எதிர்ப்பார்ப்பு. - கீர்த்தனா, திருவள்ளூர்.
நம்முடைய தொகுதியைச் சேர்ந்த பிரதிநிதிதான் பிரச்சினைகளை முன்னெடுத்து வைப்பார். எனவே, வேட்பாளரைப் பற்றித் தெரிந்து கொண்டும் ஆராய்ந்தும் வாக்குச் செலுத்த வேண்டும். மக்களைக் களத்தில் சந்தித்துப் பேசுபவரே உண்மையான வேட்பாளர்.