

உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், பிரேக்அப்பையும் கொண்டாடப் பலர் கிளம்பிவிட்டார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் காதல் முறிவைக் கொண்டாடும் புதிய கலாச்சாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதற்காகவே ஜனவரி 31 முதல் பிப்ரவரி 16 வரை ‘பிரேக் அப் பார்’ தொடங்கப்படுகிறது.
இங்கு 8 அடி உயரத்தில் ‘பிரேக் அப்’ சுவரை அமைத்து, முன்னாள் காதலர்களுக்குச் சொல்லவேண்டிய செய்தியை எழுதி ஒட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘பிரேக் அப் - ஸ்பெஷல்’ மெனுவாக ‘டியர்ஸ் ஆஃப் மை எக்ஸ்’, ‘கோல்ட் டே இன் ஹெல்’ என்பது போன்ற சிறப்புப் பெயர்களில் உணவையும் தயாரிக்கின்றனர். பாரின் அலங்காரமும் ‘பிரேக் அப் தீமை’ வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்த பிரேக் அப் பாரின் தொடர்ச்சியாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் பிரேக் அப் பார்ட்டி கலாச்சாரமும் தொடங்கியிருக்கிறது. காதலை ‘பிரேக் அப்’ செய்தவர்கள் ஒன்றுகூடி பார்ட்டியில் பங்கேற்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்தியாவிலும் அசாமில் பிரேக் அப் பார்ட்டி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
காதலர் தினத்துக்குச் சிறப்புத் தள்ளுபடி கொடுக்கும் பார்களுக்கு மத்தியில், ‘பிரேக் அப்’பையும் இயல்பாக எடுத்துகொண்டு கொண்டாட இந்தக் காலத் தலைமுறையினர் கிளம்பிவிட்டனர்.