

விளையாட்டில் வெற்றி பெற்றவர் காலம் கடந்தும் போற்றப்படுவார். இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தவர்களை இந்த உலகம் எளிதாக மறந்துவிடும்.
ஆனால், போட்டியின் கடைசிவரை போராடிய வீரர், வீராங்கனைகள் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறார்கள். அப்படியோர் ஆட்டத்தை ஆடி வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், இந்தியாவின் இளம் பாட்மிண்டன் வீரர் லக் ஷயா சென்.
ஆரம்பம்
பாட்மிண்டன் விளையாட்டு வரலாற்றில் மிகவும் பாரம்பரியான ஒரு தொடர், இங்கிலாந்து ஓபன். புகழ்பெற்ற இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1980இல் பிரகாஷ் படுகோன், 2001இல் கோபிசந்த் ஆகியோர்தான் அந்த சாம்பியன் வீரர்கள்.
இதில், கோபிசந்த் வெற்றிவாகை சூடிய ஆண்டில்தான் லக் ஷ்யா சென் பிறந்தார். அன்று முதல் இன்றுவரை ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரில் இந்தியாவுக்கு இன்னொரு சாம்பியன் வீரர் கிடைக்கவே இல்லை. ஆனால், இரண்டு முறை வெற்றிக்கு அருகே சென்று போராடித் தோற்றிருக்கிறார் லக் ஷயா.