

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கும் கிளாஸ்கோ நகருக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆம், அவருடைய பதக்கக் கனவு தொடங்கியது கிளாஸ்கோவில் இருந்துதான்.
அப்போது அவருக்கு வயது 14. இப்போது அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாததாக கிளாஸ்கோ மாறிவிட்டது. கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான பளுதூக்குதல் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார், தமிழரான ராஜா முத்துப்பாண்டி. பதக்கம் வென்ற உற்சாகத்தில் இருந்த அவர், ஸ்காட்லாந்தில் இருந்தபடியே தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
கிளாஸ்கோ கனவு
“2014இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியை டிவியில் பார்த்தேன். பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் என்னுடைய சீனியரான வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இரவு நேரம் நடைபெற்ற அந்தப் போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினோம். அப்போதிருந்தே பளுதூக்குதலில் சாதிக்க வேண்டும், இந்திய ஜெர்ஸியை அணிய வேண்டும், பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. அப்போது கண்ட கனவு, அதே கிளாஸ்கோ நகரில் 2026இல் நனவாகி இருப்பது பிரமிப்பாக இருக்கிறது” என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் ராஜா.
காயங்களை வென்று...
2018இல் தன்னுடைய 18 வயதில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டிக்குத் தகுதிபெற்றார் ராஜா. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆண்களுக்கான பளுதூக்குதல் 62 கிலோ எடைப்பிரிவில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
தொடர் காயம் காரணமாக 2022 காமன்வெல்த் போட்டிக்கு அவரால் தகுதிபெற முடியவில்லை. என்றாலும், முறையான திட்டமிடலோடுகூடிய பயிற்சியால் காயங்களிலிருந்து மீண்டு ‘கம்-பேக்’ கொடுத்திருக்கிறார் ராஜா.