

பேராசைக்காரர்களைக் கண்டறிவது எப்படி? பார்க்க சாதுக்கள் போலத்தான் காணப்படுவார்கள். ஆனால், இப்படிப் பேசி ஆதங்கப்படுவார்கள்:
“தோணுச்சு.. சரி.. போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்.” “வாய் வரைக்கும் வந்துச்சு, சரி, பொழைச்சுப்போன்னு விட்டுட்டேன்.”
“எனக்குக் கேக்கத் தெரியாம இல்ல.” “அன்னிக்கே நாக்கைப் புடுங்கற மாதிரி கேட்டிருக்கணும். விட்டுட்டேன்.” “நுனிநாக்கு வரை வந்துச்சே!”
இவர்கள்தான் அந்தப் பேராசைக்காரர்கள். அதாவது, நம்மில் 99% பேர்! இவர்கள், பேசுவதைப் பார்த்தால் குணக்குன்றுகள் போலத்தான் தோன்றும்.
ஆனால், சொல்லவில்லை, அதனால் நினைத்தபடி காட்சிகள் நடக்கவில்லை. நியாயம்தானே என்று பெருந்தன்மையாக இருப்பார்களா, என்ன! அப்படிச் சொல்லி இருக்கலாமோ, இப்படிச் சொல்லி இருக்கலாமோ என்றெல்லாம் பரிதவிக்கத்தான் செய்வார்கள்.
ஆனால், சொல்ல நினைத்தபடி காட்சிகள் நடப்பதைத்தானே உள்ளுக்குள் விரும்புகிறோம். இது பேராசை இல்லையா? சொல்லியிருக்க வேண்டிய விநாடி கடந்துவிட்டது.
எனவே, அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபட்சத்தில் இப்படித் தோன்றத்தான் செய்யும். ‘எனக்கு மட்டும் ஏன்?’ நுனிநாக்குவரை வந்துச்சே. ஏன் சொல்லவில்லை? உங்களின் 25,000ஆவது வயதில்கூட அல்லது கலியுகம் முடியும் வரையிலும்கூட இந்த ஆதங்கம் தொடரும்!
பலரும் சொல்லாத வார்த்தைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலக் காட்சியை மனதில் மீண்டும் மீண்டும் ஓட்டி, கற்பனையில் சொல்ல நினைத்ததைச் சொல்லி காயமடைந்துகொள்கிறார்கள். ஒருகட்டத்தில் சொல்லாததைப் புரிந்துகொண்டு நடக்கவும், அடுத்தவரைக் குற்றம்சொல்லவும் தலைப்படுகிறோம்.