

“எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் ஒத்துப்போகல. நான் ஒண்ணு சொன்னா, அவன் ஆப்போசிட்டா ஒண்ணு சொல்றான்... காண்டாகுது.” இப்படித்தான் சுற்றிலும் காட்சிகள். மானேஜருக்கும் எனக்கும் ஒத்துப்போகல/ கணவருக்கும் எனக்கும் / என் தோழிக்கும் எனக்கும் / அப்பாவுக்கும் எனக்கும் / பக்கத்து வீட்டுக்காரனுக்கும் எனக்கும் / உலகத்துக்கும் எனக்கும்.
முரண்பாடுகள்... கூடவே இருக்கும் தவிர்க்கவே முடியாத சகமனிதர் நம்மைச் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றால், ‘நாம சரியாத்தானே இருக்கோம்? அப்படி இருந்தும், நமக்குன்னு ஏன் இப்படித் தப்புத்தப்பா வந்து வாய்க்குது?’ இந்தச் சூழ்நிலையை விட்டு நகரவும் முடியாத நிலையில் தோன்றும், ‘எனக்கு மட்டும் ஏன்?’ இப்போதுகூட சினிமாவில், சற்று நேரம் வந்துபோகிற, கேமியோ கதாபாத்திரத்தை விவரித்துச் சொல்லும்போது, ‘மௌன ராக’த்துல கார்த்திக் வந்து போன மாதிரி ஒரு கேரக்டர்’ என்கிறார்கள்.
இவ்வளவுக்கும் அந்தப் படம் 1986இல் வந்து, அதிலிருந்து நாற்பது காலண்டர்கள் மாற்றப்பட்டுவிட்டன. அந்த நேரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், அதன் குழந்தைகூட இப்போது கல்லூரிக்குப் போயிருக்கும். இன்றும் கார்த்திக்கின் உற்சாகம் ததும்பும் பாத்திரம் எடுபட்டதற்கு என்ன காரணம்? அதை யோசிக்கும் முன் சாத்வீக, அன்பான, கருணையான ஏலியன்கள் நிறைந்த ஓர் உலகைப் பார்த்துவரலாம்.
ஏலியன் என்றாலே பிரிடேட்டர், மனிதர்களை வேட்டையாடும் விநோத ஜீவிகள்தான் ஆங்கிலப் படங்களின் புண்ணியத்தால் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இப்படியெல்லாம் இல்லாமல், சில அருமையான ஏலியன்களும் உள்ளன. அவை அகிம்சையில் நம்பிக்கை கொண்ட அப்பிராணி ஏலியன்கள்.
மனிதர்கள் ஏதாவது சொல்லிவிட்டால்கூட, அவர்களைக் கஷ்டப்படுத்தாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடும்; பொய் சொல்லாது; அவமரியாதையைத் தாங்காது. இப்படிப்பட்ட ‘அருமையான ஏலியன்கள் இருப்பதால்தான் பிரபஞ்சத்தில் மழையே பெய்கிறது’ என்று சொல்லும் அளவு மானஸ்த ஏலியன்களைப் பற்றி ‘ப்ளூரிபஸ்’ என்றொரு வெப் சீரீஸ் அண்மையில் வந்தது.