

சாய் சுஜித் - சாய் அபிஜித்
வெப்சீரிஸ்களில் ‘மனிஹெய்ஸ்ட்’ போன்று ‘அனிமே’வில் (anime) தமிழகத்தின் கடைக்கோடிவரை ரசிகர்களை வசீகரித்திருப்பது, ‘நருடோ!’. ஜப்பானியப் படைப்பான இது, தமிழில் கிளை விரித்ததன் பின்னணியில் சாய் சுஜித், சாய் அபிஜித் சகோதரர்கள் இருக்கின்றனர்.
இவர்களின் ‘டப்பிங்’ பயணம் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. எட்டு வயதில் பொதிகைத் தொலைக்காட்சியில் ‘தெய்வக் குழந்தை’ எனும் சீரியலில் நம்மாழ்வாராக நடித்தார் சாய் சுஜித். அந்தக் கதாப்பாத்திரத்துக்கு அவரே டப்பிங் பேச, அதன் தொடர்ச்சியாக ‘shuriken school’ எனும் அனிமேஷன் தொடரில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அறிமுகம்
“குமார் சார், துர்காபிரசாத் ரெண்டு பேரும்தான் என்னையும் தம்பியையும் டப்பிங்கில் அறிமுகப்படுத்தினாங்க. சிறு வயதில் தமிழ், தெலுங்கில் நிறைய சீரியல்களில் நடித்தாலும், ஒருகட்டத்தில் நடிப்பு போதும்கிற முடிவுக்கு வந்துட்டோம். பிறகு, முழுக்கவே டப்பிங்கில் பிஸியானோம்” என்கிறார் சுஜித்.
‘நிறைய பால் குடி; தோனி மாதிரி வருவே’ என்று ‘மொழி’ படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்கிற குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவரே.
பள்ளி, கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் சாய் சுஜித் வெவ்வேறு வேலைகளுக்கு நடுவே டப்பிங்கைத் தொடர்ந்திருக்கிறார்.
சாய் அபிஜித்தோ தமிழ், தெலுங்கில் டப்பிங் கலைஞராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருந்திருக்கிறார். ‘டெட்பூல் & வல்வரின்’, ‘லிலோ & ஸ்டிச்’ படங்களுக்கு தமிழாக்க வசனம் எழுதியிருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் இருவரும் சேர்ந்து ‘சாய் சுரபி’ எனும் டப்பிங் ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.
ஸ்டுடியோ தொடக்கம்
“எதையோ பண்ணிட்டு இருப்பதற்குத் தெரிஞ்ச விஷயத்துலயே டெவலப் பண்ணுங்கன்னு சொல்லி அம்மா, அப்பாதான் இதைத் தொடங்கி வச்சாங்க” என்கிறார் சாய் சுஜித். தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்தாலும், அது தொடர்ந்து இயங்குவதற்கு வழியமைத்தது ‘நருடோ’ தொடர்தான்.