

தமிழ் சினிமா வரலாற்றில் பல காதல் காவியங்களைப் பார்த்திருப்போம். இதில் வெற்றி பெற்ற காதல் பல, தோல்வியுற்ற காதல் சில. எப்படி இருந்தாலும் ஒரு காதல் கைக்கூட வேண்டுமெனச் சம்பந்தப்பட்ட காதலர்களையும் தாண்டி, அவர்களைச் சேர்த்துவைக்கவும், நண்பர்களாக இருப்பவர்களை ஜோர் ஏற்றி ஜோடியாக்கவும் மெனக்கெடுவது உடனிருக்கும் நண்பர்கள்தான்.
அப்படி இருந்த பொன்னான காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது காதலர்களுக்கு மத்தியில் நல்லவராகவும் கெட்டவராகவும் எப்போதும் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்படுபவர்தான் ‘பாய் பெஸ்ட்டி’.
நட்பா காதலா? - ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனும் சிநேகாவும் கடைசிவரை நண்பர்களாகவே இருந்துவிடுவார்கள். இதைப் போலவே ‘காதல் காதல்தான் நட்பு நட்புதான்...’ என்கிற பாடல் வரி ஞாபகம் இருக்கிறதா? ‘பாண்டவர் பூமி’ படத்தில் ‘தோழா தோழா...’ பாடலின் வரி இது. நண்பர்களாக இருக்கும் ஆண், பெண் இருவர் காதலர்களாக மாற முடியாது என்பதைப் பெண் கதாபாத்திரம் அழுத்திச் சொல்வது போன்றதொரு சூழல் இருக்கும். ஆனால், திரைப்படத்தின் முடிவில் அந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கும்.