

“நல்ல கதை ஒண்ணு இருக்கு. அந்தக் கதைக்குத் திரைக்கதை, வசனம்கூட ரெடியா இருக்கு. நீ நடிச்சா நல்லா இருக்கும்” என்று அந்த உயரமான இளைஞர் பச்சனிடம் சொன்னார், இந்தியில் புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் சலீம் கான் (ஜாவேத்).
“அப்படியா?” என்று கேட்ட இளைஞர் பச்சனின் பதிலில் சலிப்பு. “ஆமாம். இந்தக் கதையில் நடிக்க தர்மேந்திரா, திலிப்குமார், தேவ் ஆனந்த்திடம் கேட்டிருக்காங்க. ஆனால், அவங்க நடிக்க முன்வரல. இந்த வாய்ப்பை நீங்க பயன்படுத்திக்குங்க. உங்களைத் தான் நான் பரிந்துரை செஞ்சிருக்கேன்” என்று சொன்ன சலீமின் பேச்சில், எப்படியாவது இந்த இளைஞரை அந்தக் கதையில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்கிற ஆசை வெளிப்பட்டது.
வாட்டிய விரக்தி
அப்போது பச்சன் ஓர் இளம் நடிகர். 1969இல் இந்தித் திரைப்பட உலகில் அறிமுகமானார். அவருக்குச் சீராகத் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால், என்ன செய்வது? படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் தன்னுடைய எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்கிற கவலை பச்சனுக்கு.
நடிப்பு தனக்குச் சரிப்பட்டு வருமா என்று யோசனை வேறு. இப்படியாக பச்சனின் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தபோதுதான் சலீமின் பரிந்துரை வந்தது. சலீம் ஒன்றும் பச்சனைச் சும்மா பரிந்துரைக்கவில்லை. இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றிருக்கிறார்கள்.
குறிப்பாக, ‘பாம்பே டூ கோவா’ படத்தில் பச்சனின் நடிப்புத் திறமையைக் கண்டுதான் இந்த வாய்ப்பு, அவருக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் சலீம். புதிய கதையின் நாயகன் ஒரு கோபக்கார இளம் போலீஸ்.
அது பச்சனுக்கு நன்றாகப் பொருந்தும் என்று நினைத்தார். ஆனால், பச்சனோ திரையுலகம் தனக்குச் சரிப்பட்டு வருமா என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியில் இருந்தார். தொடர்ச்சியாக 11 படங்கள் சரியாகப் போகவில்லை என்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் அது.