Published : 08 Nov 2022 04:05 PM
Last Updated : 08 Nov 2022 04:05 PM

மாறிப்போன குழந்தைகள் உலகம் - ஓவியரின் போருக்கு எதிரான போர்!

கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை மறக்க நினைப்பது இயல்பு. ஆனால், நடந்து முடிந்ததை இனி மாற்றி அமைக்க முடியாது என்கிற உண்மை புரியும்போது வலியும் வேதனையும்தான் மிஞ்சுகின்றன. அப்படி எளிதில் மறக்க முடியாத வலி மிகுந்த வரலாற்று ஒளிப்படங்களுக்குத் தனது கற்பனையால் வண்ணம் பூசியிருக்கிறார் அசர்பைஜானைச் சேர்ந்த ஓவியர் குண்டஸ் அகெவ்.

சொந்த நாட்டிலேயே சமூக அநீதிகள் அரங்கேறிக்கொண்டிருக்க, தனது ஓவியங்கள் மூலம் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகிறார். உலகெங்கிலும் நடைபெற்ற அல்லது நடந்துகொண்டிருக்கும் சமூக அநீதி, போர், அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான நல்லதோர் உலகைத் தனது ஓவியங்களில் காட்சிப்படுத்திவருகிறார். வியட்நாம் போர், ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சு, இரண்டாம் உலகப்போரின்போது நடந்த பெரும் இன அழிப்பு, உலகை உலுக்கிய ‘கழுகும் குழந்தையும்’ ஒளிப்படம் எனப் பல வரலாற்று ஒளிப்படங்களை மாற்றி வரைந்திருக்கிறார் குண்டஸ். தான் காண விரும்பும் குழந்தைகள் உலகத்தை ஓவியங்களில் காண்பித்துவரும் குண்டஸைச் சமூக வலைத்தளத்தில் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வியட்நாம் போரின்போது பத்திரிக்கையாளர் நிக் வுட் எடுத்த படம் உலகப்புகழ் பெற்றது. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கைகளை நீட்டியபடி ஓடிவரும் சிறுமியின் ஒளிப்படம் உலகை உலுக்கியது. இதழியலுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘புலிட்சர் விருது’ பெற்ற இப்படத்தைக் குழந்தைகள் மகிழ்ச்சியாக ஓடி வருவது போலவும், பலூன்கள் பறக்கவிட்டும் மாற்றி வரைந்திருக்கிறார் குண்டஸ். இரண்டு படங்களையும் ஒப்பிட்டு குண்டஸுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதுபோல வரலாற்றில் பதிவான முக்கியப் போர் ஒளிப்படங்களை மாற்றி வரைந்துவருகிறார் குண்டஸ். இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்திருக்கும் அவர், “இமாஜின் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் குரலாக ஓவியங்களை வரைந்திருக்கிறேன். கண்ணீரும் ரத்தமுமாய் இருக்கும் போர்ப் புகைப்படங்களை அன்பும் அழகும் கலந்து மகிழ்ச்சியானதாக மாற்றி அமைக்கிறேன். நான் விரும்பும் குழந்தைகள் உலகம் இதுவாகத்தான் இருக்கும்!” எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தனது ஓவியங்களால் உலக பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் குண்டஸ், அசர்பைஜானில் வாழ்வதற்கு அந்நாட்டு அரசு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. குண்டஸை நாட்டைவிட்டு வெளியேற்றவும், அவரது உரிமத்தை ரத்து செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகளை மீறி தனது ஓவியங்களைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவரும் குண்டஸ், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை என்கிறார்.

குண்டஸ் அகெவின் மற்ற ஓவியங்களைக் காண அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பாருங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x