Last Updated : 20 Jul, 2021 03:13 AM

 

Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

சமூக மனசாட்சியின் கண்

டேனிஷ்

ஓராயிரம் சொற்களால் விவரிக்க முடியாத உணர்வை ஒரேயொரு ஒளிப்படம் உணர்த்திவிடக்கூடும். ராய்ட்டர்ஸ் சர்வதேசச் செய்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைமை ஒளிப்படக் கலைஞரான டேனிஷ் சித்திக்கியின் ஒளிப்படங்களே அதற்குச் சான்று. எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று, குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்கிற ஊடக அறத்தை எந்த நிலையிலும் கைவிடாதவர் டேனிஷ் சித்திக்கி. தான் கைகொண்ட அர்ப்பணிப்புக்கு விலையாகத் தன் உயிரையே கொடுத்துள்ளார் 38 வயதான டேனிஷ்.

ஆப்கானிஸ்தானில் ஆப்கன் பாதுகாப்புப் படைகளுக்கும் தாலிபான்களும் இடையே நடக்கும் மோதலைப் படமெடுக்க கந்தகாருக்குச் சென்றவர், ஜூலை 16 அன்று கொல்லப்பட்டார். தான் கொல்லப்படுவதற்கு முன்புவரை நடந்தவற்றை காணொலியாகவும் செய்தியாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுசெய்துள்ளார் டேனிஷ். ஆப்கன் சிறப்புப் படையினரின் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாலிபான்கள் நடத்திய தாக்குதலையும் அவர் காணொலியாகப் பதிவிட்டுள்ளார்.

படங்கள் அல்ல ஆவணங்கள்

மும்பையைச் சேர்ந்த இவர், இந்தியாவின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் தன் ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒரு அரசியல் செயல்பாட்டின் வீரியத்தை எடுத்துரைக்கும். அந்தப் படங்கள் உலகுக்கு உண்மையை மௌனமாகக் கடத்திக்கொண்டிருந்தன.

இந்தப் பின்னணியில் டேனிஷ் சித்திக்கியின் இறப்பைக் கொண்டாடும்விதமாக சமூக வலைத்தளங்களில் வெறுப்பை உமிழும் கருத்துகளை சிலர் பதிவிட்டுள்ளனர். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு நடுவே உண்மையை உலகுக்குச் சொல்பவர்கள் எல்லா காலத்திலும் கொண்டாடப்பட்டதில்லை. “அரசியல், விளையாட்டு, வணிகம் என்று எந்தத் துறை சார்ந்து படமெடுத்தாலும் தனித்த கதைகளைச் சொல்லும் முகங்களைப் படமெடுப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று முன்பு ஒருமுறை டேனிஷ் சொல்லியிருந்தார். வரலாற்றில் வெறுப்புக்கு நிரந்தர இடம் கிடையாது. ஆனால், உண்மையைச் சொன்னவர்களுக்கு உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x