

படங்கள் உதவி: ஞானம்
கமலின் ‘தேவர் மகன்’ (1992) படத்தைத் தொலைக்காட்சியிலோ இணையத்திலோ பார்த்த தற்காலத் தலைமுறைக்கு, அப்படத்தில் பஞ்சவர்ணமாக நடித்த ரேவதி யின் அப்பா பரமசிவமாக வரும் ‘கள்ளபார்ட்’ நடராஜனை நினைவிருக்கும். அதில், மணமகன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட, மகளின் திருமணம் பாதியில் நிற்கும் போது பரிதவித்துத் துடிக்கும் எளிய மனிதனாக நம் மனதை நடிப்பால் பிடித்துவிடுவார்.
அடுத்து வந்த ஆண்டில் வெளியானது ‘அமராவதி’. அஜித் அறிமுகப்படமான இதில், கதாநாயகி சங்கவி யின் குடும்ப வக்கீலாக வருவார். நூற்றாண்டு காணும் இவரை, நூறாண்டுத் தமிழ் சினிமாவில் இவரும் ஒரு குணச்சித்திர நடிகர் எனக் கடந்து போய்விட முடியாது.
திராவிட சினிமா எழுச்சி பெற்ற 50களில் தொடங்கி ‘கள்ளபார்ட்’ நடராஜன் தமிழ்த் திரை வெளியில் தன் நடிப்பாலும் அதைக் கடந்த பன்முகத் திறமைகளாலும் தன் பெயரை அழுந்தப் பதிந்து சென்றுள்ள கலை யாளுமை. தமிழ் நாடக மேடை தந்த தரமான கலைஞர்.
நாயகன், வில்லன், குணச்சித்திரம், நடன அமைப்பாளர், பின்னணிப் பாடகர், பின்னணிக் குரல் கலைஞர் என 160க்கும் அதிகமான படங்களில் மக்கள் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்றிக் கவர்ந்தவர்.
வளர்ந்துகொண்டிருந்த திரை நடனக் கலையில், தமிழ்நாட்டின் கூத்து மரபில் புகழ்பெற்றிருந்த நாட்டுப்புற நடன அசைவுகளை உள்நுழைத்து, அவற்றை நவீனமாக்கிப் புகழ்பெற வைத்தவர். அக்கால முன்னணிக் கதாநாயகர்களும் நடனத் திறமை, பாடும் திறமையால் மக்களைக் கவர்ந்த சந்திரபாபு, சதாசிவன் (பட்டம் சதன்), நாகேஷ் ஆகிய நகைச்சுவை நட்சத்திரங்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு இவரு டைய வசீகரமான நடனத் திறமை புகழ்பெற்று விளங்கியது.
நடிகர் - நடிகையர் திலகத்துக்காக...
அறுபதுகள் வரையிலும் கதை யோட்டத்தில் இடைச்செருகலாக வரும் கொண்டாட்டப் பாடல்களில் நடனமாடிப் பல பெண்கள் புகழ்பெற்று விளங்கினார்கள். அவர்களில் பலர் பின்னாளில் கதாநாயகிகளாகவும் உயர்ந்தார்கள். அப்போதுதான் கொண்டாட்டப் பாடல்களில் நடன மாடி பெண்களுக்கு இணையாக ஆண்களாலும் புகழ்பெற முடியும் என்பதைக் காட்டினார் நடராஜன்.
அவரது நடனத் திறமையை அறிந்த தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், அவரை ஒரு முழுப் பாடலில் ஆட வைக்கும் படி, தான் தயாரித்த ‘வண்ணக்கிளி’ (1959) படத்தின் இயக்குநர் டி.ஆர். ரகுநாத்திடம் உத்தரவிட, ‘முதலாளி’ யின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் நடராஜன்.
அந்தப் படத்தில் கிராமத்து தாதாவான பூச்சியின்(ஆர்.எஸ்.மனோகர்) முதன்மை அடியாளாகக் கழுகு என்கிற கதாபாத்திரத்தில் வருவார் நடராஜன். நாயகன் மாயனின் (பிரேம் நசீர்) தங்கையான வண்ணக் கிளியை (பி.எஸ்.சரோஜா), மாயன் இல்லாத நேரத்தில் வற்புறுத்தி அழைத்துப்போய் திருமணம் செய்து கொள்வான் பூச்சி.
திருமணத்துக்குப் பின் புதுமணப்பெண்ணை வரவேற்று பூச்சியின் கூட்டத்தினர் பாடி ஆடும் பாடல்தான் ‘சித்தாடை கட்டிக்கிட்டு.. சிங்காரம் பண்ணிக்கிட்டு...’ என்கிற புகழ்பெற்ற துள்ளாட்டப் பாடல். கே.வி.மகாதேவன் இசையில், மருத காசியின் வரியில் எஸ்.சி.கிருஷ்ணா - பி.சுசீலா பாடிய இந்தப் பாடலில் எம்.சரோஜாவுடன் இணைந்து நடராஜன் ஆடிய ஆட்டம் யூடியூப் யுகத்திலும் மில்லியன்களில் பார்வை யாளர்களைப் பெற்று வருகிறது.
நடராஜனின் நடனத் திறமையைத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல; இயக்குநர்களும் நன்கு அறிந்து வைத்திருந் தார்கள். அவர்களில் ஒருவர் ஏ.பி.நாகராஜன். ‘நவராத்திரி’ படத்தில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்து நடித்த தெருக்கூத்து ஆட்டக் காட்சிக்கு நடன அமைப்பு செய்துதர ஏ.பி.என். அழைத்தது நடராஜனைத்தான்.