

உங்களுக்குத் தெரியுமல்லவா! இந்த மானுடத் திரள் ஒரு காலத்தில் வேட்டையாடுவதையே முக்கியமான வேலையாக வைத்திருந்தது. ஆனால், அந்த வேட்டை அவர்களின் பசியைப் போக்குவதற்கானது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
உணவுக்காக எதையெல்லாம் வேட்டையாட வேண்டும், எவ்வளவு வேட்டையாட வேண்டும் என்கிற கணக்கு அவர்களின் கண்களிலும், கைகளிலும் இருந்தது. ஆனால், இந்த மானுடத் திரளுக்குள் வர்க்கப் பேதம் தொடங்கியபோது, அதிகமாக உழைக்காமல், அளவுக்கதிகமான செல்வத்தைச் சேர்ப்பவர்கள் முளைத்தபோது மீண்டும் இந்தப் பூமியில் வேட்டையாடும் பழக்கம் வேகமெடுக்கத் தொடங்கியது.
அந்த வேட்டை, வெறும் கெளரவத்திற்காக நடத்தப்பட்டது. சில நேரங்களில் பொழுது போவதற்காக நடத்தப்பட்டது. பல நேரங்களில் தங்களுடைய பலத்தை நிரூபிப்பதற்காக நடத்தப்பட்டது. விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி மகிழ்ந்துகொண்டிருந்த அந்தச் சோம்பேறிகள் மனிதர்களை வேட்டையாடுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கவில்லைதான். என்ன! மனிதர்களை வேட்டையாடினார்களா என்று அதிர்ச்சியில் ஆழ்ந்து விடாதீர்கள். வரலாறு நெடுகிலும் நடந்த போர்களிளெல்லாம் நிகழ்ந்தது மனித வேட்டையல்லாமல் வேறென்ன?
வெறும் போர்களில் மட்டும் மனித வேட்டை நடக்கவில்லை. காலனியாதிக்கத்துக்குக் கீழே கட்டுண்டு கிடந்த நாடுகளில், மூன்றாம் உலக நாடுகளில், ஏழை நாடுகளில் வெறுமனே பொழுதுபோக்குக்காக, வெறுமனே விளையாட்டுக்காக மனிதர்களை வேட்டையாடி மகிழ்ந்த, மானுட விரோதிகள் இருந்தார்கள் என்பது ஒருவகையில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கலாம்.
ஆனால், இனவெறி நிறைந்தவர்களுக்கு, பணவெறி பிடித்தவர்களுக்கு, மானுட விரோத மனப்பான்பை கொண்டவர்களுக்கு மனிதர்களை வேட்டையாடி மகிழும் இந்தச் செயல் ஒரு சாதாரணச் செயலாக இருந்தது என்பது அதிர்ச்சியை அதிகரிப்பதாக இருக்கிறது. அப்படியொரு மானுட விரோதச் செயலைச் செய்கிறவர்களை ஒரு கிராமமே சேர்ந்து எதிர்த்து முறியடிப்பதைப் பற்றியதுதான் இத்திரைப்படம். ஆம், மானுட விரோதிகளுக்கு எதிராக மானுட ஒற்றுமையின் வலிமையைப் பறைசாற்றும் நல்ல திரைப்படம்.
பிரேசிலைச் சேர்ந்த இயக்குநர்கள் க்லேபர் மெண்டோன்சா ஃபில்யோ, ஜூலியானோ டோர்நெல்லஸ் இருவரும் இணைந்து இயக்கிய ‘பகுரா’ (Bacurau) என்கிற இத்திரைப்படம் 2019இல் வெளிவந்தது. போர்த்துகீசியச் சொல்லான ‘பகுரா’ என்பது பூச்சிகளை உண்ணும் இரவுநேரப் பறவை. இருண்ட தொலைதூரப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவைகள் பிரேசிலியக் கலாச்சாரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.
“இத்திரைப்படம் ஒரு கிராமத்தைப் பற்றிய கதை மட்டுமல்ல; உலக அரசியலால், அதிகாரத்தால் மறக்கப்படும் அல்லது அழிக்கப்படும் மக்களைப் பற்றியது” என்கிறார், இயக்குநர் க்லேபர் மெண்டோன்சா ஃபில்யோ. ”இந்தத் திரைப்படம் பழைய காலனித்துவத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை; இன்றும் நடந்து கொண்டிருக்கும் புதியவகை காலனித்துவம் பற்றியும், புதியவகை ஆக்கிரமிப்பு பற்றியும் பேசுகிறது” என்கிறார் இயக்குநர் ஜூலியானோ டோர்நெல்லஸ்.
மூன்றாம் உலக நாடுகள் எப்படி இருந்தன என்று பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு இந்தத் திரைப்படம் சரியான உதாரணமாக இருக்கலாம். வசதி படைத்த மேலை நாடுகள் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த மக்களின் ரத்தத்தைக் குடித்தும், அவர்களின் வியர்வையைப் பருகியும் அவர்களின் உழைப்பைச் சுரண்டியும் எப்படியெல்லாம் தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொண்டார்கள் என்பதை மெல்லிய குரலில் சொல்லக்கூடிய படம்.
அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள், சொந்த நாட்டு மக்கள் கொல்லப்படுவதற்கும், சுரண்டப்படுவதற்கும், ஏமாற்றப்படுவதற்கும் எப்படியெல்லாம் துணை போனார்கள் என்பதைச் சொல்லும் படம். மிக முக்கியமாக, அரசிடமோ அல்லது எந்த அதிகாரத்திடமோ உதவி கேட்காமல், தங்கள் நிலத்தில் நுழைந்துவிட்ட பேராபத்தை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்பது மட்டுமல்ல, வெற்றியடைவதைச் சொல்கிறது இந்தப் படம்.
வடகிழக்கு பிரேசிலில் இருக்கும் வறண்ட பகுதியான பகுராவை நோக்கி தண்ணீர் லாரி வந்துகொண்டிருக்கிறது. அந்த லாரியில் தொலைதூர நகரிலிருந்து கிராமத்துக்கு வந்துகொண்டிருக்கிறாள் தெரேசா. கிராமத்தில் கார்மெலிட்டா என்ற 94 வயது மூதாட்டி, அந்தக் கிராமத்தின் தலைவி இறந்துவிட்டாள். தெரேசா வந்துகொண்டிருப்பதும் அந்த மரணத்திற்காகத்தான். கிராமத்தின் மொத்த மக்களும் கார்மெலிட்டா வீட்டின் முன்னால் கூடியிருக்கிறார்கள்.
கிராமத்துக்காக வாழ்ந்து மறைந்து போயிருக்கும் அந்த மூத்தவளுக்கு மரியாதை செய்கிறார்கள் மக்கள். தெரேசாவும் கார்மெலிட்டாவிற்கு இறுதி மரியாதை செய்கிறாள். ஆசிரியராக இருக்கும் கார்மெலிட்டாவின் மகன் பிளினியோ, அம்மாவைப் பற்றியும், அவளுக்கும் அந்த ஊருக்குமான உறவு பற்றியும் உரை நிகழ்த்துகிறார். இறுதியில் எல்லோரும் சேர்ந்து கார்மெலிட்டாவை அடக்கம் செய்கிறார்கள்.
பள்ளிக்கூடத்தின் அறைக்கு வெளியே குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஆசிரியர் பிளினியோ. வானத்தில் பறக்கும் விமானத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட, “அது எங்கே செல்கிறது?” என்று கேட்கிறார்கள் குழந்தைகள். “நகரத்துக்குச் செல்கிறது, வாருங்கள் நான் வரைபடத்தில் காட்டுகிறேன்” என்று முயற்சிக்க, அந்த வரைபடத்தில் அவர்களின் கிராமமான பகுரா இல்லாமல் இருக்கிறது.
மீண்டும் தேடிப்பார்த்து ”தோராயமாக இங்குதான் இருக்க வேண்டும்” என்று குழந்தைகளிடம் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தின் கண்கள் பார்க்க மறுக்கும் அந்தக் கிராமத்துக்கு, அதிகாரத்தின் கால்கள் வரமறுக்கும் அந்தக் கிராமத்துக்கு, தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக வருகிறான் அப்பகுதியின் மேயர் டோனி ஜீனியர்.
அவன் வருவதைக் கவனித்த மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். ஒரு லாரி முழுவதும் பழைய புத்தகங்களைக் கொண்டுவந்து கொட்டுகிறான் டோனி. உணவுப் பொருட்களை எடுத்து வந்திருக்கிறான். சில அத்தியாவசிய மருந்துகளையும் எடுத்து வந்திருக்கிறான். முக்கியமாக புதிய சவப்பெட்டிகள் சிலவற்றையும் எடுத்து வந்திருக்கிறான். மக்களிடம் வாக்குச் சேகரித்துவிட்டுத் திரும்பும்போது, வழக்கமாக அவன் அழைத்துச் செல்வதுபோல அந்தக் கிராமத்தின் இளம் பெண் ஒருத்தியை அவனோடு அழைத்துச் செல்கிறான். வந்திருக்கும் பொருட்களைப் பார்ப்பதில் கவனமாக இருக்கிறார்கள் மக்கள்.
இரவு கிராம மக்கள் முன்னிலையில் டோனி கொண்டு வந்திருக்கும் உணவுப் பொருட்களில், காலாவதியானதுதான் அதிகமாக இருக்கிறது. அவற்றை எப்படிப் பிரிக்கிறீர்களோ பிரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார் பிளினியோ. புத்தகங்களை நாம் வழக்கம்போல பிரித்துக்கொள்ளலாம் என்கிறார்.
அவரைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தின் மருத்துவரும், கார்மெலிட்டாவின் தோழியுமான டொமிங்காஸ் டோனி கொண்டுவந்து கொடுத்திருக்கும் மருந்துகள் பயன்படுத்தக்கூடாதவை என்று சொல்லி அவற்றைக் குப்பைத் தொட்டியில் எறிகிறாள். அதேநேரத்தில் கார்மெலிட்டாவின் மரணத்துக்கு வரும்போது போலியோ, பாம்புக் கடி போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்து கொண்டுவந்த தெரேசாவை பாராட்டுகிறாள்.
இரவு அந்த ஊருக்குள் குதிரைகள் ஓடுவதைக் கவனிக்கிறார்கள் ஊர்மக்கள். காலையில் ஊருக்கு வெளியே இருக்கும் பண்ணையைப் பார்த்துவரச்சொல்லி நண்பர்களை அனுப்புகிறான், ஊரின் முக்கிய நபரான பகோட்டே. காலையில் தண்ணீர் லாரி ஊருக்குள் வருகிறது. லாரியின் மீது நான்கு இடங்களில் குண்டுதுளைக்கப்பட்டு தண்ணீர் வீணாகிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். பாகேட்டேவும் தெரேசா போன்றவர்களும் ஓட்டுனரோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் ஓர் ஆணும் பெண்ணும் சுற்றுலாப் பயணிபோல வருகிறார்கள். ஊரைப்பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்கிறார்கள். பண்ணையில் எல்லோரும் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள் கிராமவாசிகள். பயத்தில் ஊருக்குத் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் வருகிறவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கிறார்கள்.
அந்தக் கிராமத்தின் தலைக்கு மேலே ட்ரோன் ஒன்று பறந்துகொண்டிருக்கிறது. அந்த மக்களின் நடவடிக்கைகளை அது சிலருக்குச் சொல்கிறது. அதன்படி அவர்கள் விளையாட்டாக அந்த மனிதர்களை வேட்டையாடி மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து இந்தச் சாகசச் செயலைச் செய்வதற்காக வந்திருக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பகோட்டே ஊருக்கு வெளியே இருக்கும் புரட்சியாளனாகிய நண்பன் லுங்காவை ஊருக்குள் அழைத்துவருகிறான். லுங்காவின் பின்னால் அணிதிரள்கிறார்கள் ஊர்மக்கள்.
விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று கொல்லப்பட பதட்டம் அதிகமாகிறது. மறுநாள் வெளிநாட்டுக்காரர்களில் இரண்டு பேர் கொல்லப்பட, மொத்தப்பேரும் கிராமத்துக்குள் நுழைகிறார்கள். கொரில்லாத் தாக்குதலுக்குப் பழக்கப்பட்டவர்களும், எதிர்ப்புணர்வு நிறைந்தவர்களுமான கிராம மக்கள் அந்த ஆக்கிரமிப்பாளர்களை, அந்த மானுட விரோதிகளை அழித்தொழிக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக இருந்த மேயர் டோனி ஜீனியரை ஆடைகளைக் களைந்து, கழுதைமேல் ஏற்றி கண்ணைக் கட்டி பாலைவனத்துக்குள் அனுப்புகிறார்கள்.
மக்களின் ஒற்றுமைக்கு முன்னால் ஆக்கிரமிப்பாளர்களாட்டும், அதிகாரமாகட்டும், மானுட விரோதிகளாகட்டும் எதுவுமே ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தங்களுக்கு எதிரான எல்லாவற்றையும் அழித்து, அமைதியை நிலைநாட்டுவார்கள் என்பதற்கு இத்திரைப்படம் மிகச்சிறந்த உதாரணம்.
கட்டுரையாளர்: கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com