Published : 26 Aug 2022 10:25 AM
Last Updated : 26 Aug 2022 10:25 AM

கோலிவுட் ஜங்ஷன்: மாரியம்மாவிலிருந்து ரெனே!

திறமையான நடிகர்களை தன் படங்களில் மீண்டும் நடிக்க வைக்கும் இயக்குநர்களில் பா.இரஞ்சித்தும் ஒருவர். யாழி ஃபிலிம்ஸுடன் இணைந்து அவர் தயாரித்து, இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது' வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. அதில், தனது முந்தைய படமான ‘சார்பட்டா பரம்பரை’யில் நடித்த பலரை மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார். அவர்களில் கதாநாயகியாக நடித்துள்ள துஷாரா முக்கியமானவர்.

மீண்டும் இரஞ்சித் இயக்கத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது: “ ‘நட்சத்திரம் நகர்கிறது’ நான் மிகவும் நேசித்து நடித்த படம். மாரியம்மா கதாபாத்திரம் கொடுத்து சினிமாவில் என்னை பிஸியாக்கிவிட்டவர் ரஞ்சித் சார். இந்தப் படத்தில் என்னை ‘ரெனே’வாக வாழ வைத்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பின் முன்னணி நட்சத்திரமாக உயர்வேன்” என்றார்.

வில்லன் டூ நாயகன்!

தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ‘டிப்டாப்’ வில்லனாக வந்து மிரட்டியவர் அமிதாஷ் . அதன்பிறகு ‘வானம் கொட்டட்டும்’, ‘குட்டி ஸ்டோரி’ ,‘தள்ளிப் போகாதே’ எனப் பல படங்களில் பலவித கதாபாத்திரங்களில் வந்து கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குநர் ராமின் உதவியாளர் சி.அரவிந்த் ராஜ் எழுதி, இயக்க, கவி கிரியேஷன்ஸின் தயாரித்துள்ள ‘பரம்பொருள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சிலை கடத்தல் குற்றங்களின் பின்னணியில் க்ரைம் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சரத்குமாரும் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசியும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்துக்காக நாயகன் அமிதாஷ் - சங்கர் மகாதேவன் இருவரும் இணைந்து பாடியுள்ள ‘சிப்பர ரிப்பர’ என்கிற பாடல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

எதற்கும் துணிந்த கார்த்தி!

தரமான உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிப்பது உறுதியாகிவிட்டது. இன்னும் தலைப்பு இறுதிசெய்யப்படாத இப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். தற்போது அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் வல்லவராயன் வந்தியத் தேவனாக 'பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தில், குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்ட சண்டைக் காட்சிகள், தாவுதல், குதித்தல், கடலில், ஆற்றில் நீந்துதல், கோட்டைச் சுவர் ஏறுதல் எனப் பல ஆபத்தான ஆக்‌ஷன் காட்சிகளில் ‘டூப்’ பயன்படுத்த மறுத்து, படம் முழுவதும் ‘ரிஸ்க்’ எடுத்து நடித்து மணி ரத்னம், படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றிருக்கிறாராம்.

கதையை நம்பி..

வடிவேலு கூட்டணியிலும் தனியாகவும் நூற்றுக்கும் அதிகமான படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் சிங்க முத்து. இவரது மகன் கார்த்திக் சிங்கா ‘கொடை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கேரளத்தின் புது வரவான அனயா நடித்துவருகிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், போஸ் வெங்கட், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.

ராஜா செல்வம் இயக்கத்தில் எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சுபாஷ்கவி இசையமைத்திருக்கிறார். கொடைக்காணலில் ரிசார்ட் நடத்துகிறார் நாயகன். சுற்றுலா வந்து அங்கே தங்குபவர்கள் மாறிமாறி மோசடி கும்பல் ஒன்றால் ஏமாற்றப்படுகிறார்கள். அதைத் தடுக்க நாயகன் என்ன செய்தார் என்பதுதான் கதை. “கதையை நம்பி மகனை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார் சிங்கமுத்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x