

ஒரு முரட்டு கிராமத்தானாக ‘கொம்பன்’ படத்தில் கொம்பையா பாண்டியனாக அசரடித்தார் கார்த்தி. அந்தப் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் கார்த்தியுடன் இணைந்து அவரை வேறொரு களத்தில் ‘விருமன்’ஆக வார்த்திருக்கிறார். விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதி லிருந்து ஒரு பகுதி:
‘விருமன்’ யார்?
கூட்டுக் குடும்பம், பாசம், ரோஷம்னு இருக்கிற நம்ம கிராமத்து மக்களின் கதைகளைச் சொல்றது என் வழக்கம். எந்தவொரு உறவையும் மற்ற உறவுகள்கிட்ட விட்டுக் கொடுக்கக் கூடாது அப்படிங்கறதை மண்சார்ந்து சொல்ற படம் இது. வாழ்க்கையில எல்லோருமே தவறு செய்றவங்கதான்.
ஆனா, அதை, சுத்தி இருக்கிறவங்க யாராவது சுட்டிக்காட்டணும். தப்புன்னு உணர வைக்கணும். அதுதான் நேர்மையான உறவா இருக்கும். அந்த நேர்மையை அழுத்தமாகப் பேசுறவன் ‘விருமன்’. தேனி மாவட்டக் கதைக்களம். அங்க அதிகமா புழங்கற குலசாமி பெயர், ‘விருமன்’. அதையே தலைப்பா வச்சிட்டேன்.
‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு கார்த்தியோட மீண்டும் இணைஞ்சிருக்கீங்க...
ஆமா. மணி ரத்னத்தை தவிர, கார்த்தியை இயக்கிய இயக்குநர்களோட அவர் இரண்டாவது படம் பண்ணினதே இல்லை. ஆனா, எனக்கு இன்னொரு படம் கொடுத்திருக்கார். அந்த நம்பிக்கை பெரிசுன்னு நினைக்கிறேன். அதுக்கு கார்த்தி சாருக்கு நன்றி சொல்லணும். ’குட்டிப்புலி’ படத்துல ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘நம்மள நம்பறவங்கதான் நம்மளுக்கு தெய்வம்’னு. அதுதான் இப்ப ஞாபகம் வருது. இந்தப் படத்துல ‘கொம்பனை' விட அடுத்தக் கட்டத்துக்குப் போயிருக்கிற ஆர்ப்பாட்டமான ‘விருமனாக' கார்த்தியைப் பார்க்கலாம்.
இயக்குநர் ஷங்கருடைய மகள் அதிதி அறிமுகமாறாங்களே?
எங்க குழுவை நம்பி அவங்க நடிக்க வந்ததே ‘விருமன்’ படத்துக்கு சிறப்பு. என் படங்கள்ல நாயகிக்கும் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்துல தேன்மொழிங்கற கேரக்டர்ல நடிக்கிறாங்க அதிதி. தண்ணீர் கேன் போடற பொண்ணு. தன்னுடைய அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணுங்கறதுக்காக உழைச்சுட்டு இருக்கிற பொண்ணு. ஷங்கர் சார் மிகப்பெரிய இயக்குநர்.
அவர் மகள் கண்டிப்பா சொகுசாதான் வாழ்ந்திருப்பாங்க. இந்தப் படத்துக்காக, அவரை செருப்பே இல்லாம கூட்டிட்டுப் போயி, ட்ரை சைக்கிள் மிதிக்க வச்சு, தண்ணீர் கேனை தூக்க வச்சிருக்கோம். அறிமுக நடிகர் அப்படிங்கறதைத் தாண்டி அருமையா நடிச்சிருக்காங்க.
இயக்குநர் ஷங்கர் ஏதும் சொன்னாரா?
‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் வெளி வந்ததும், அதிதியை தாவணி லுக்ல பார்த்துட்டு, ’ரொம்ப அழகா இருக்கு’ன்னு சொல்லியிருக்கார். இதை அதிதிதான் சொன்னாங்க. ஷூட்டிங் நடக்கும்போது அப்பப்ப போன் பண்ணி, ’எத்தனையாவது டேக்ல ஓகே பண்ணுன, நேரத்துக்கு ஸ்பாட்ல இருக்கணும், டைரக்டர் சொல்றதை கேட்கணும்’னு அதிதிகிட்டே சொல்லிட்டே இருப்பாராம்.
ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரின்னு பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கே?
இந்தக் கதைக்கு அவ்வளவு பேர் தேவைப்பட்டாங்க. ராஜ்கிரண், பந்தல் போடறவரா வர்றார். ஹீரோவோட தாய்மாமன். விருமனை வளர்த்ததுல அவர் பங்கு அதிகம். ‘கொம்பன்’ படத்துல ரெண்டு பேரும் நேருக்கு நேரா பார்க்கக்கூட மாட்டாங்க. இதுல சிரிச்சு பேசிட்டு இருப்பாங்க.
முனியாண்டியா, பிரகாஷ்ராஜ். ‘குத்துக்கல்’லுங்கற கேரக்டர்ல சூரி. ‘குழவிக்கல்லு’வா இந்திரஜா, எழுத்தாளர் வசுமித்ரா, கருணாஸ், சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, இளவரசுன்னு நிறைய பேர் இருக்காங்க. எல்லாருக்குமே முக்கியத்துவம் இருக்கும். யுவன் இசை படத்துக்கு பெரிய பலமா அமைஞ்சிருக்கு.
உங்க படங்கள்ல வன்முறை அதிகம்னு விமர்சனம் இருக்கே...
அப்படி சொல்ல முடியாது. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்னு சொல் வாங்கள்ல, அப்படித்தான் அதைக் காண் பிக்கிறேன். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தாதீங்கன்னு நேரடியா சொன்னா, யாரும் கேட்கறதில்லை.
‘புகை பிடிப்பது புற்றுநோயை' உண்டாக்கும்னு அதன் பாதிப்புகளைக் காட்டும்போது, ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீதி வருதில்ல. அப்படித்தான் நானும் ‘வன்முறை தீர்வல்லன்னு' சொல்றேன். அதைச் சொல்றதுக்கு சில காட்சிகளை அப்படி வைக்க வேண்டியிருக்கு. ‘விருமன்’ படத்துல வன்முறை இருக்காது.