Last Updated : 07 Jan, 2022 09:56 AM

 

Published : 07 Jan 2022 09:56 AM
Last Updated : 07 Jan 2022 09:56 AM

நினைவோடை: இயக்குநர்களின் இயக்குநர்

பெருமதிப்பிற்குரிய மகா கலைஞன், உன்னதமான எண்ணங்களும் வாழ்க்கையைப் பற்றியான தீர்க்கமான பார்வையும் கொண்டிருந்த மாமனிதர் ஐயா கே எஸ் சேதுமாதவன் (1927 – 2021) கடந்த டிசம்பர் 24 அன்று 94 ஆவது வயதில் மறைந்தார். தனது இருத்தலை என்றைக்குமாக அடையாளப்படுத்தியே அவர் சென்றிருக்கிறார். இருபதாண்டுகளுக்கும் மேலாக வெள்ளித் திரையிலிருந்தும் ஊடக ஒளிவட்டத்திலிருந்தும் தொலைவில்தான் வாழ்ந்து வந்தார் என்றாலும் தமிழ், மலையாள சினிமாவுக்கு அவர் வழங்கியக் கொடுப்பினைகள் என்றைக்குமானவை.

'நாளை நமதே' படத்தில் எம்ஜிஆர், லதா.

‘பால் மணம்’ (1968), ‘கல்யாண ஊர்வலம்’ (1970), ‘நாளை நமதே’ (1975), ‘நிஜங்கள்’ (1982), ‘மறுபக்கம்’ (1991), ‘நம்மவர்’ (1994) என்று ஆறு படங்களை மட்டுமே தமிழில் இயக்கியிருக்கிறார். ‘நாளை நமதே’ மற்றும் ‘ஏணிப்படிகள்’ (1973) படங்களை தயாரித்தவரும் அவரே. ஆனால் அதைவிடவெல்லாம் மகத்தானது நவீன தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு. தமிழ் சினிமாவின் அடித்தளத்தை நிலைநாட்டிய பெரும் இயக்குநர்களுடன் இணை, துணை இயக்குநராகப் பணியாற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க பல தமிழ் படங்களின் உருவாக்கத்துக்குத் துணை நின்றவர் சேதுமாதவன்.

அறியப்படாத பங்களிப்பு

1951 முதலான 45 ஆண்டுகாலம் திரைக் கலையில் தொடர்ந்து இயங்கி வந்தார். இந்தியா அதுவரைக்கும் கண்டிராத அளவில் பிரம்மாண்டமான படம் ‘சந்திரலேகா’ (1948). அப்படத்தின் ஒளிப்பதிவாளரும், ‘மார்க்கண்டேயா’ (1935), ‘பாதுக பட்டாபிஷேகம்’ (1936), ‘கன்னியின் காதலி’ (1949), ‘ஏழை படும் பாடு’ (1950) போன்ற படங்களின் இயக்குநருமான கே ராம்நாத்திடம் உதவி இயக்குநராக, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ‘மர்மயோகி’ (1951) படம் வழியாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சேதுமாதவன். ராம்நாத்தின் ‘தாய் உள்ளம்’ (1952), ‘விடுதலை’ (1954), ‘சுகம் எங்கே’ (1954) போன்ற படங்களிலும் பணியாற்றினார். மட்டுமல்லாது, எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சுவாமி, சுந்தர் ராவ் நட்கர்ணி, டி.ஆர். சுந்தரம் ஆகிய இயக்குநர்களுடனும் சேர்ந்தியங்கினார்.

ஏ.எஸ்.ஏ. சுவாமி இயக்கிய ‘சுதர்சன்’ (1951), ‘நீதிபதி’ (1955), ‘கற்புக்கரசி’ (1957), ‘தங்கப் பதுமை’ (1959) ஆகிய படங்களிலும், சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கிய ‘அழகி’ (1953), ‘மகாதேவி’ (1957) படங்களிலும் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய ‘வளையாபதி’ (1952), ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956), ‘பாசவலை’ (1956) படங்களிலும், எல்.வி.பிரசாத் இயக்கிய ‘ராணி’ (1952), ‘மனோகரா’ (1954), ‘மங்கையர் திலகம்’ (1955), ‘பாக்கியவதி’ (1957) படங்களிலும் பணியாற்றினார். இவற்றில் பல படங்களில் அவர் இணை இயக்குநர். ஆனால் தனித்து ஓர் இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பினை தமிழ் சினிமா அவருக்கு வழங்கவில்லை. சிங்கள மொழியில்தான் தனது முதல் படத்தை அவர் இயக்க நேர்ந்தது.

'நாளை நமதே' படப்பிடிப்பில் எம்ஜிஆருடன் சேதுமாதவன்

தாயின் மொழியில்…

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து தமிழராகவே வாழ்ந்தவர் சேதுமாதவன். 18 வயதுக்குப் பிறகுதான் தனது தாயின் மொழியான மலையாளத்தைப் படிக்கவும் எழுதவும் சரிவரப் பேசவும் கற்றுக்கொண்டார். மலையாளத்தின் முதன்முதல் வண்ணத் திரைப்படம் ‘கண்டம் பெச்ச கோட்டு’ (1961) தான் சேதுமாதவன் இயக்கவேண்டியிருந்த முதல் மலையாளப் படம். எழுத்து, முன் தயாரிப்பு ஆயத்தங்கள் என அதற்காக எல்லாமே செய்து முடித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு நாள் முன்பு, தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், அப்படத்தைத் தானே இயக்குவதாகச் சொன்னார். அவ்வாறாக மலையாளத்தின் முதல் வண்ணத் திரைப்படத்தின் இயக்குநராக டி.ஆர்.சுந்தரம் அறியப்படுகிறார் என்றாலும் அப்படத்தை உண்மையில் உருவாக்கியவர் சேதுமாதவன்.

தனது முதல் மலையாளப் படமான ‘ஞான சுந்தரி’யை 1961-ல் இயக்கினார். அது 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஞான சௌந்தரி’ எனும் தமிழ் படத்தின் மறு ஆக்கம். தனது இரண்டாவது மலையாளப் படமான ’கண்ணும் கரளும்’ (1962) வழியாகக் குழந்தை நடிகர் கமல்ஹாசனை மலையாளத்துக்கு அறிமுகம் செய்தார் சேதுமாதவன். அது கமலுக்கும் இரண்டாவது படம். பின்னர் 1974-ல் ‘கன்யாகுமாரி’ மலையாளப் படம் வழியாக கமல் ஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக நடிக்க வைத்தவரும் கே.எஸ்.சேதுமாதவன் தான்.

மலையாளத்தில் ஓர் உச்ச நட்சத்திர இயக்குநராக மாறி அறுபதுக்கும் மேலான படங்களை இயக்கினார். மலையாளப் படங்களுக்கே உரித்தானது என்று பிற்பாடு கொண்டாடப்பட்ட யதார்த்தத் தன்மையையும் இலக்கியச் சார்பையும் வளர்த்தெடுத்தவர்களில் முதன்மையானவர் சேதுமாதவன். ‘மணவாட்டி’ (1964), ‘ஓடயில் நிந்நு’ (1965), ‘யக்ஷி’ (1968), ‘கடல் பாலம்’ (1969), ‘அடிமகள்’ (1969), ‘வாழ்வே மாயம்’ (1970), ‘அர நாழிக நேரம்’ (1970), ‘ஒரு பெண்ணின்டெ கத’ (1971), ‘கரகாணாக்கடல்’ (1971), ‘இங்குலாப் சிந்தாபாத்’ (1971), ‘அனுபவங்ஙள் பாளிச்சகள்’ (1971), ‘புனர்ஜென்மம்’ (1972), ‘அச்சனும் பாப்பயும்’ (1972), ‘பணிதீராத்த வீடு’ (1973), ‘சட்டக்காரி’ (1974), ‘ஓப்போள்’ (1980) போன்ற அவரது படங்கள் மலையாளத்தின் எக்காலத்துக்கும் உரிய திரை அனுபவங்கள். அவர் உருவாக்கிய திரைப்படப் பாணியே இன்றளவும் மலையாளத் திரைப் படங்களின் மையமாகத் தொடர்கிறது.

மறுபக்கம்

மறக்கப்பட்ட சாதனை

பத்து தேசிய விருதுகள், பத்து கேரள அரசு விருதுகள், ஒரு ஆந்திர அரசு விருது, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற கே.எஸ்.சேதுமாதவன்தான் சிறந்த இந்தியத் திரைப்படத்துக்கான ஜனாதிபதியின் சுவர்ண கமலம் விருதினை முதன்முதலில் தமிழ் சினிமாவுக்கு வாங்கித் தந்தவர். படம் ‘மறுபக்கம்’ (1991). ஆனால் இந்த வரலாற்றுச் சாதனை, போதிய அளவில் பேசப்படவோ கண்டுகொள்ளப்படவோ இல்லை.

அவரது ஒரேயொரு தெலுங்குத் திரைப்படமான ‘ஸ்த்ரீ’ (1995) பல விருதுகளை வென்ற படம். கன்னடத்திலும் ‘மானினி’ (1971) எனும் படத்தை இயக்கினார். 1975-ல் இந்தியில் அவர் இயக்கிய ‘ஜூலி’ எனும் படம் கலை ரீதியாகவும் வணிகரீதியாகவும் சாதனை படைத்த வெற்றி. அதன் பாடல்கள் இன்றளவும் உலகெங்கும் ஒலித்து வருபவை. சஞ்சீவ் குமார் கதாநாயகனான ‘யஹி ஹே ஜிந்தகி’ (1977) போன்ற படங்களையும் இந்தியில் இயக்கினார்.

இயக்குநர் சேதுமாதவனுடன் ஷாஜி

கே.எஸ்.சேதுமாதவனின் பங்களிப்பினை பெருமளவில் குறிப்பிடாமல், தமிழ், மலையாள சினிமாவின் வரலாற்றைப் பதிவு செய்யவே முடியாது. நேர்மையும் மனிதத்தை மேன்மைப்படுத்தும் நோக்கமும் கொண்ட திரைப்படங்களை நேசிக்கும் அனைவருக்கும் என்றென்றும் உள்தூண்டுதலாக விளங்கும் ஒப்பிலாக் கலைஞனுக்கு பிரியாவிடை.

கட்டுரையாளர், கலை விமர்சகர், திரைக் கலைஞர்.

தொடர்புக்கு: shaajichennai@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x