

படங்கள் உதவி: ஞானம்
திரையரங்குக்கு வந்து படத்தைப் பார்த்து சினிமாவை இன்று வாழவைப்பது ஜென் ஸீ தலைமுறைதான். நடுத்தர வயதினரும் குடும்பப் பார்வையாளர்களும் மழைக்காகக்கூடத் திரையரங்கின் பக்கம் ஒதுங்காமல் தெறித்து ஓடுவதற்குக் காரணம் க்ரைம் த்ரில்லர் மற்றும் அதீத வன்முறைப் படங்களின் ஆதிக்கம்.
இன்று க்ரைம் த்ரில்லர் படங்களை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத சுவாரசியத் துடன் உருவாக்கும் இயக்குநர்கள் வந்து விட்டார்கள். ஆனால், இப்படியொரு சினிமா வகையை, ‘க்ரைம் த்ரில்லர்’ படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம்போல் தமிழ் சினிமாவுக்கு எடுத்துக்காட்டிய ஓர் இயக்குநர், 50களின் ‘கறுப்பு - வெள்ளை’ சினிமாவுக்குப் புதிய சுவாசம் கொடுத்தார். அவர்தான் வீணை எஸ்.பாலசந்தர்.
அவருடைய படங்கள் வரிசையாக க்ரைம் த்ரில்லர்களாக இருந்தாலும் சமூகத்தின் ஒவ்வோர் அடுக்கையும் அதில் அங்கம் வகிக்கும் பல வண்ண மனிதர்களையும் அட்டகாசமான கதாபாத்திர உருவாக்கம், சுவாரசியமான காட்சிமொழி வழியாக அவை சித்தரித்தன.
‘இது நிஜமா?’, ‘என் கணவர்’ என இரண்டு படங்களுக்குத் திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த எஸ்.பாலசந்தர், மூன்றாவதாக எடுத்தது அவருடைய முதல் ‘மாஸ்டர் பீஸ்’; 1951இல் வெளியாகி ஹிட் அடித்த ‘கைதி’. ‘கைதி’க்குப் பிறகுதான் பாடல்களே இல்லாமல் ‘அந்த நாள்’ என்கிற தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த படைப்பைக் கொடுத்தார்.
அடையாளம் கண்ட ஜூபிடர்
அவ்வை டி.கே.சண்முகம், என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ராமச்சந்திரன், மு.கருணாநிதி, எஸ்.டி.சுந்தரம், ஏ.எஸ்.ஏ.சாமி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்படப் பல திறமையாளர்களை அடை யாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர்கள் ஜூபிடர் அதிபர்கள் சோமுவும் முகைதீனும்.
அதே காலக்கட்டத்தில் பன்முகத் திறமைகளின் மொத்த உருவமாக வலம்வந்த இளைஞர் எஸ்.பாலசந்தரைத் தங்கள் ஸ்டுடியோவுக்குள் கொண்டுவந்தனர்.
அப்போது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ வில் ஜூபிடர் நிறுவனத்தின் படங்கள் தயாராகிவந்தன. 1951இல் எம்.ஜி.ராமச்சந்தர் ராபின்ஹுட் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த ‘மர்மயோகி’, பானுமதி நாயகியாக நடித்துவந்த ‘ராணி’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தது ஜூபிடர்.
இந்த இரண்டு படங்களுக்கு நடுவே எஸ்.பாலசந்தர் திரைக்கதை எழுதியிருந்த ‘மொகல் பிரின்சஸ்’ கதையை ஒரு நகைச்சுவைப் படமாகச் சிறிய பட்ஜெட்டில் நாயகனாக நடித்து இயக்க அழைத்தனர். காரணம், நல்ல இசைத் திறமையுடன் நகைச்சுவை உணர்வு வெளிப்படும் விதமாகக் குறும்புகள் செய்து நடிப்பதில் எஸ்.பாலசந்தர் தன் முதலிரண்டு படங்களில் திறமையைக் காட்டியிருந்ததுதான்.
ஆனால் எஸ்.பாலசந்தரோ, 1947இல் வெளியான ஹாலிவுட் படமான ‘டார்க் பேசேஜ்’ படத்தின் தாக்கத்தில் எழுதியிருந்த ‘ரத்தம்’ (வெளியானபோது படத்தின் பெயர் 'கைதி' என மாற்றப்பட்டது) என்கிற திரைக்கதையை அவர்களுக்குச் சொன்னார்.
‘என்ன இவர் ஹியூமர் பண்ணுவார் என்று பார்த்தால், சீரியஸ் த்ரில்லர் கதையைச் சொல்கிறாரே...’ என்று கொஞ்சம் யோசித்தாலும் பாலசந்தரின் திறமை மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்ததால், உடனே ஓகே என்றனர்.