

விஷால் நடிப்பில் வெளிவந்த ‘பட்டத்து யானை' படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன். அலட்டல் இல்லாமல் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்தார் அந்தப் படத்தில்.
ஆனால் அடுத்த படத்தை உடனடியாக ஒப்புக்கொள்ளாத அவர், ‘ஹீரோயின் ரேஸ்’ அனல் பறக்கும் கோலிவுட்டில் இந்தச் சின்னப் பெண் என்ன செய்யப்போகிறார் என்று அர்ஜுனின் ரசிகர்களைக் கவலையுடன் பேச வைத்தார். ஆனால் தற்போது தனது அப்பா அர்ஜுன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வந்துவிட்டார்.
“அந்தப் படத்தில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதற்காக இத்தனை நாள் கதக் நடனம் கற்றுக்கொண்டேன். ஏற்கெனவே நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் கதக் தெரியாது. அப்பா உருவாக்கிய கேரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும். இல்லன்னா திட்டு விழும். அவ்வளவு கண்டிப்பான இயக்குநர் அவர். அதுக்காகத்தான் பொறுமையா கத்துக்கிட்டேன்” என்றவருக்கு இரண்டு இந்திப் பட வாய்ப்புகள் வர, இரண்டையுமே மறுத்துவிட்டாராம்.
தமிழ் சினிமால முதல்ல பேர் வாங்கணும். அப்புறம்தான் மத்த மொழிகள். ஆனால் இந்தப் படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாராகுது’ எனும் ஐஸ்வர்யா அர்ஜுன் லண்டனில் ஃபேஷன் டிசைனிங் படித்தவர். அப்பா இயக்கத்தில் நடித்துக்கொண்டே அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறாராம்.