

ஒரு சலனத் திரைப்படம் எப்படி உருவாகிறது, அதில் எவ்வாறு நடிப்பது, சண்டைக் காட்சியில் எப்படி நடிப்பது என எதுவும் அறிந்திராத ராஜா சாண்டோவுக்கு பாம்பே நேஷனல் ஸ்டுடியோவில் நடத்தப்பட்ட ‘டெஸ்ட் ஷூட்’ ரணகளமாக முடிந்தது. தனது உதவி இயக்குநர் செய்த தவறையும் சண்டைக் காட்சிகளில் வீரதீரமாகத் தாக்குவதுபோல் எப்படிப் பொய்யாக நடிக்க வேண்டும் என்பதையும் சாண்டோவுக்கு எடுத்துச் சொன்னார் இந்தியாவின் சலனப் பட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.என்.பதாங்கர், ‘சண்டைக் காட்சியில் நடிக்க ஏற்றவர்’ என்று ராஜா சாண்டோவை முடிவு செய்துவிட்டார்.
ஆனால், அவரின் அழகிய முகத்தோற்றமும் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்த அவரின் மேற்கத்திய ஸ்டைலையும் பார்த்து, மற்ற உணர்ச்சிகளுக்கு சாண்டோவால் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டார். அதனால், அதையும் அப்போதே பரிசோதிக்க விரும்பினார். அதற்கான ‘டெஸ்ட் ஷூட்’டைத் தன்னுடைய மேற்பார்வையில் நடத்திய பதாங்கர், சாண்டோவிடம் நடிக்க வேண்டிய காட்சியை விளக்கிக் கூறினார்.