இயக்குநரின் குரல்: விக்ரமுக்கு யார் வில்லன்? - விஜய் சந்தர் பேட்டி

இயக்குநரின் குரல்: விக்ரமுக்கு யார் வில்லன்? - விஜய் சந்தர் பேட்டி
Updated on
2 min read

“வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையுமே திட்டமிட்டுத்தான் செய்கிறோம். நல்ல விஷயம், கெட்ட விஷயம் எதுவென்றாலும் 'ஸ்கெட்ச்' போட்டு வேலைச் செய்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். எனக்கு அந்த வார்த்தை மிகவும் பிடித்திருந்தது. படத்தின் கதைக்கும் ஏற்றதொரு தலைப்பாக இருந்தது" என்று 'ஸ்கெட்ச்' படத்தின் தலைப்பு ரகசியத்தோடு பேசத் தொடங்கினார் அந்தப் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர்.

ஆமாம். அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் உண்மைகள் கலந்த, கமர்ஷியல் கதை. ‘புதுப்பேட்டை', ‘பொல்லாதவன்', ‘மெட்ராஸ்' ஆகிய படங்களில் வடசென்னையை வேறொரு கலரில் காட்டினார்கள். ஆனால், வடசென்னையில் நான் பார்த்த சம்பவங்கள், மனிதர்கள் ஆகியோரைப் பற்றி சொல்லியிருக்கிறேன். இதற்காக ஏழு ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். நீங்கள் பார்க்கப் போகும் கதாபாத்திரங்கள் அனைத்துமே நிஜமானவை. அதில் எனது கற்பனையைக் கலந்து உயிரூட்டியுள்ளேன். இதற்காக இரவு பகலாக வடசென்னையிலேயே தங்கியிருந்து அங்குள்ள மக்களின் எண்ண ஓட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு கதையை எழுதினேன்.

வடசென்னையில் வாழ்பவர்களில் விளிம்புநிலை மக்களே அதிகம், அங்கே இருப்பவர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்றிருந்த காலமெல்லாம் மாறிவிட்டது. நாம்தான் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். தற்போதுள்ள சூழலில் யாரையுமே அப்படிக் காணமுடியாது. 'ஸ்கெட்ச்' படத்தில் தற்போது அங்கிருக்கும் வாழ்க்கையின் ஒருபகுதியை அப்படியே பதிவு செய்திருக்கிறேன்.

படப்பிடிப்பு தொடங்கி ஒரே மூச்சில் முடித்துவிட்டோம். அனைத்துப் பெரிய இயக்குநர்களுடனும் பணிபுரிந்து விட்டார் விக்ரம். அவருடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஆறு மாதத்தில் இப்படத்தை முடித்திருக்க முடியாது. என்னை இரண்டு பாடல்களும் எழுத வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் 'உன்னால் முடியும் விஜய்' என்று ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். நமக்குள் ஒரு திறமையிருக்கிறது என்று தெரிந்துவிட்டால், அதை நமக்கே தெரியாமல் வெளியே எடுத்து வரும் திறமை விக்ரம் சாரிடம் இருக்கிறது. இரண்டாவது படத்தில் அவரை இயக்கியிருப்பது நான் செய்த பாக்கியம்.

சென்னையின் பாரிஸ், திருவொற்றியூர் உள்ளிட்ட தெருக்களில் விக்ரமை வைத்து இயக்குவது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒவ்வொருநாள் படப்பிடிப்பு முடியும்போதும் நாளை எங்கே படப்பிடிப்பு எனக் கேட்கவே மாட்டார், எத்தனை மணிக்குப் படப்பிடிப்பு என்றுதான் கேட்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவுடன், கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார். இவ்வளவு கூட்டம் இருக்கிறதே, எப்படி நடிப்பது என்று ஒரு நாள் கூட அவர் யோசித்ததே இல்லை. அங்குள்ள அனைவரையும் தன் வசப்படுத்தி விடுவார். கேரவன் வரமுடியாத இடங்களில் காரிலேயே அமர்ந்து கொள்வார். விக்ரம், தமன்னா, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர்தான் இப்படத்துக்கு மிகப்பெரிய பலம். இவர்களுடைய உழைப்பு கண்டிப்பாகப் பேசப்படும்.

வில்லன் யார் என்று கணிப்பதுதான் கதையே. நமது வாழ்க்கையில் இவர்தான் வில்லன் என்று யாரையுமே தேர்ந்தெடுக்க முடியாது. வாழ்க்கையில் எங்கு வேண்டுமானாலும் திருவாளர் வில்லன் இருக்கலாம். வடசென்னையில் அனைவருமே காரசாரமான ஆட்கள் என்பதால் பலரையும் பகைத்துக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். ஆகையால் நிறைய வில்லன்கள் படத்தில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கான கதைகள் கைவசம் உள்ளன. விரைவில் அவர்களையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு ‘ஸ்கெட்ச்’ அடித்தளம் அமைத்துத் தரும் என்று நம்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in