

மூத்த அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிவருகிறார். புதிய வாசகர்களை மனதில் கொண்டு அறிவியல் அறிமுக நூல்களை நிறைய எழுதியிருக்கிறார். அந்த வகையில் புதிதாக 'ஏஐ... மயக்கமா, கலக்கமா?!', 'மிக மிகக் கடினமா... கோடிங்', 'ஜீபிஎஸ்...இல்லை என்றால் என்ன ஆகும்?', 'ட்ரோனில்... பறக்க முடியுமா பள்ளிக்கு?' ஆகிய நூல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்களால் உலகை ஆள உதவும் கோடிங், இடங்களைக் கண்டறிய உதவும் ஜிபிஎஸ், ட்ரோன் ஆகிய அனைத்துமே இன்றைக்குத் தவிர்க்க முடியாத நவீனத் தொழில்நுட்பங்களாக உள்ளன.
செயற்கை நுண்ணறிவு பற்றி ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது, பரவலாகப் பேசப்படுகிறது. அதேநேரம் ட்ரோன், ஜிபிஎஸ், கோடிங் போன்றவையும் இன்றைக்குப் பெரும் தாக்கம் செலுத்திவருகின்றன. இவற்றைப் பற்றி இந்த நூல்கள் அறிமுகப்படுத்துகின்றன.