

விபத்து ஏற்படுத்திய வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லையென்றால், பாதிக்கப்பட்டவர் இழப்பீடு பெறுவது எப்படி?
விபத்து ஏற்படுத்திய வாகனத்தால் ஒருவர் உயிரிழந்தாலோ அல்லது கொடுங்காயம் ஏற்பட்டாலோ விபத்து ஏற்படுத்திய வாகனத்துக்குக் காப்பீடு இல்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர் இழப்பீடு பெறலாம்.
எவ்வாறு என்றால், விபத்து ஏற்படுத்திய வாகன உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விபத்துக்கான இழப்பீடு பெறலாம். அவ்வாறு இழப்பீடு உத்தரவு ஆன பின்னரும் வாகன உரிமையாளர் இழப்பீட்டு உத்தரவு தொகை செலுத்தவில்லை என்றாலும் நிறைவேற்று மனு (Execution Petition) தாக்கல் செய்து வாகன உரிமையாளரின் சொத்துகளைக் கைப்பற்றி ஏலம் விட்டு உரிய தொகையைப் பெறலாம்.
மருத்துவச் சிகிச்சையில் ஏமாற்றம் / அலட்சியம் நடந்தால் இழப்பீடு கோருவது எப்படி?
மருத்துவச் சிகிச்சையின்போது மருத்துவர் அல்லது மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொண்டதால் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டாலோ உரிய இழப்பீடு பெற முடியும். உரிய இழப்பீடு கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவருக்குச் சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும். மருத்துவரோ, மருத்துவமனையோ நஷ்டஈடு தொகை தராத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி, பாதிப்புக்கு உரிய நிவாரணமும் நஷ்ட ஈடும் பெறலாம்.
சொத்துத் தகராறு ஏற்படும்போது நீதிமன்றத்தை அணுகாமல் சுமுகமாகத் தீர்க்க என்ன வழிகள் உள்ளன?
சொத்துத் தகராறு ஏற்படும் போது பெரும்பாலும் உரிய சிவில் நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும். மேலும் நீதிமன்றத்தை அணுக போதிய வசதி இல்லாதவர்கள் மாவட்ட சட்டப் பணிக் குழுவிடம் மனு செய்து எதிர் தரப்புக்கு சமன் செய்து சுமுகமாக முடிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
- ஆர்.முருகபாரதி, வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்; murugabharathi.adv@gmail.com