

டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த ஐந்து மாடி விடுதிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெருநகரங்களில் வணிக நோக்கில் நடத்தப்படும் மாணவர் விடுதிகளின் மோசடிகளை மீண்டும் அம்பலப்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்திருந்த 50 ஆண்டுப் பழமையான மாணவர் விடுதி செப்டம்பர் 6ஆம் தேதி மதியம் திடீரெனச் சரிந்து விழுந்தது. ஐந்து மாடிகள் கொண்ட இந்த விடுதியில் தங்கியிருந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இரண்டு நாள்களுக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிருக்குப் போராடிய பலர் காப்பாற்றப்பட்டாலும், ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர் விடுதிகளில் அசம்பாவிதம் நிகழ்வது இது முதல்முறை அல்ல.
2024இல் டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் ஒன்றின் அடித்தளத்தில் இயங்கிய நூலகத்தில் திடீரென மழைவெள்ளம் புகுந்தது. அந்நேரத்தில் அங்குப் படித்துக் கொண்டிருந்த குடிமைப்பணித் தேர்வு மாணவர்கள் மூவர் மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். வணிக வளாக அனுமதியைப் பெற்றுவிட்டு முறைகேடாக அடித்தளங்களை வகுப்பறைகளாகவும் நூலகங்களாகவும் மாற்றும் போக்கு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.