

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் வசந்தத்தின் தொடக்கம் என்பார்கள். ஆனால், பல பெண்களுக்கு அது ஒரு ‘கணக்கெடுப்பு மையமாகவே’ மாறிப்போகிறது. மணமான முப்பதாவது நாள், அந்த வீட்டின் நாட்காட்டியில் ஒரு குறியீடு இடப்படுகிறது. அது அவளது மாதவிடாய் சுழற்சிக்கான கணக்கு.
ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்குத் தொடங்கும்போது, அந்தப் பெண்ணின் இதயம் சுக்குநூறாகிறது. “இந்த மாதமும் ஏமாற்றிவிட்டாளே” என்ற மாமியாரின் முணுமுணுப்பும், கணவனின் மவுனமான நிராகரிப்பும் அவளை ஒரு ‘தோல்வியுற்ற இயந்திரமாக’ உணரச் செய்கின்றன.
ஓரிரு ஆண்டுகள் குழந்தை இல்லையென்றால், சமூகம் அவளுக்குச் சூட்டும் பெயர் ‘மலடி’. ஒருமுறை கூட அவளை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லாத கணவன், “குறை உன்னிடம்தான்” என்று தீர்ப்பு எழுதுகிறான். இதுதான் நிவேதிதா - அறிவு தம்பதியினரின் வாழ்க்கையில் நிவேதிதாவுக்கு நேர்ந்த அவலம்.
கருப்பை எனும் அதிசயம்
ஒரு பெண் கருவுற்ற கணத்திலிருந்து, இயற்கை அவளுக்குள் ஒரு பேரதிசயத்தைச் நிகழ்த்தத் தொடங்குகிறது. சாதாரணமாக ஒரு சிறிய பேரிக்காய் அளவில் இருக்கும் அந்தத் தசைப் பை (கருப்பை), ஓர் உயிரைத் தாங்கத் தயாராகும்போது தன்னைத் தானே 500 மடங்கு வரை விரிவாக்கிக் கொள்கிறது.
இது உலகிலேயே வேறெந்தத் திசுவாலும் செய்ய முடியாத ஓர் அற்புதம். அந்தக் கருப்பைக்குள் ஒரு ‘பனிக்குடம்’ உருவாகிறது. அது ஒரு சிறு கடல் போல குழந்தையைத் தன்னுள் ஏந்திக்கொள்கிறது. வெளி உலகின் அதிர்வுகள், சத்தங்கள் எதுவுமே அந்தப் பிஞ்சு உயிரைத் தீண்டாதவாறு, நீரினடியில் ஒரு தொட்டிலைப் போல குழந்தையை அது தாலாட்டுகிறது.