

எதிர்கொள்ளும் எந்த ஒன்றிலும் தரத்தைப் பார்ப்பது பெரும்பாலான மனிதர்களின் இயல்பு. அப்படியிருக்க, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் தரமானதாக மாற்றுவதற்கான வழிகளில் ஒன்று, ‘யோகா’.
யோகாவைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களால் தலை முதல் கால் வரை புத்துணர்ச்சியை உணர முடியும். அந்த அளவுக்கு உடலின் புறத்தையும் அகத்தையும் அது சீர்படுத்துகிறது. அதேநேரத்தில், இந்த உலகை நாம் நோக்கும் விதத்தையும் முற்றிலுமாகச் சீர்படுத்தவல்லது.
ஆசனங்களின் போதான நமது உடலசைவுகள், மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதற்கான சுவாச நுட்பங்கள், தியானத்தில் பெறுகிற அமைதி ஆகியவற்றால் கிடைக்கிற பலன்கள் அதிகம். முற்றிலும் அனுபவத்தினாலேயே அந்தப் பலன்களை உணர முடியும்.
சுவாச, செரிமான மண்டலச் செயல்பாடுகளைச் சீராக்குதல், எலும்புளுக்கு வலுவூட்டுதல், மூளை - உடலுறுப்புகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், தசைகளின் நெகிழ்வுத் திறனை இலகுவாக்குதல் எனப் பலவற்றை யோகா வழங்குகிறது.
மிக முக்கியமாக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை சார்ந்த பாதிப்புகளால் அவதிப் படுபவர்கள் ஆரோக்கியத்தைக் கைக்கொள்வதற்குப் பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பு, நிம்மதியான தூக்கம், அதிக உடல்திறன், விசாலமான மனப்பாங்கு, உடல் எடை குறைப்பு, வலியிலிருந்து நிவாரணம் என்று யோகா தரும் நன்மைகள் பல.
- மாபா