Published : 16 Jul 2023 08:29 AM
Last Updated : 16 Jul 2023 08:29 AM

தமிழ்நாடு: அண்ணாவின் வாதங்கள்

1963 மே மாதத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்திலிருந்து...

என்.எம்.லிங்கம்: தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன?

சி.என்.அண்ணாதுரை: நான் எதை அடைவேன்? பார்லிமென்ட் என்பதை லோக் சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன்; தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். பழந்தமிழ்ச் சொல் ஒன்று கோடிக்கணக்கானவர்களின் நாவிலும் மனங்களிலும் இடம்பெறுகிறது என்று மகிழ்ச்சி அடைவோம். பெயர் மாற்றம் என்ற சிறிய செயலுக்கு இது போதுமான, மிகப் பெரிய ஈடு இல்லையா?

“தொன்மையான எங்களுடைய நிலப் பெயரை எங்களுடைய மாநிலம் தாங்குகிறது என்ற மன நிறைவையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் அடைவோம். சென்னையில் சைனா பஜார் என்கிற இடத்தின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை என்று மாற்றினோம். பெயர் மாற்றத்துக்குப் பிறகு, தெருவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எண்ணத்தில், உணர்வில் ஒரு பெருமிதம். நாடி, நரம்புகளில் உணர்ச்சிப் பெருக்கு என்று கண்டோம். மெட்றாஸ் என்று தொடர்வதில் தவறில்லை என்றாலும், தமிழ்நாடு என்ற பெயர் தரும் உணர்வுக்காக, தனித்தன்மைக்காக, அந்த வார்த்தையில் உள்ள தொன்மைக்காகப் பெயர் மாற்றக் கோருகிறோம்.”

18.7.1967 அன்று சட்ட மன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டபோது அண்ணா ஆற்றிய உரையிலிருந்து...

“திராவிட’ என்பதை இணைத்துக்கொண்டிருப்பதாலே தமிழ்நாடு என்பதிலே அக்கறை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில், ‘தமிழ்நாடு’ என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும் மற்றவர்கள் கொண்டுவருகிறார்களே என்பதனால் முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும் இன்றைய தினம் அவர்களும் தமிழ்நாடு என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறார்கள். ஆகையால், இந்தத் தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன்.”

“என்னுடைய பாட்டனார் காலத்திலேதான் நம்முடைய நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் இடப்பட்டது; எதிர்க்கட்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த எனது பாட்டனார் கருத்திருமன் இதை ஆதரித்தார்” என்று கருத்திருமன் பேரப்பிள்ளைகளும் எங்களுடைய பேரப்பிள்ளைகளும் எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளையெல்லாம் அவர்கள் எண்ணிப் பார்ப்பார் களேயானால், நிச்சயமாக அந்த ஆலோசனைகூடச் சொல்லாமல் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஒரு துளியும் ஐயப்பாடு கொள்ளவில்லை. ஆகையால், இத்தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x