

திருப்பூர் - கோவை பிரதான சாலையில் 8 கிமீ தொலைவிலும், கோவையில் இருந்து 43 கிமீ தொலைவிலும் உள்ளதிருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில், மனநோய் நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
தல வரலாறு: சூரபத்மனை ஆறுமுகன் தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். எப்படியிருப்பினும், சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் ஈசன் கூறியபடி மாதவி நாதரை வணங்க வந்தார்.
அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. மேற்கு நோக்கியபடி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தீர்த்தநீரால் அபிஷேகம் செய்து வணங்கினார்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சந்நிதியின் அருகில் உள்ள சதுரக் கல்லாக இருப்பதாக வரலாறு கூறுகிறது.