

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் (திருபுவனேஸ்வரம்) கம்பகரேஸ்வரர் கோயில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரம் கொண்டவராக தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். இது ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
இரண்டாம் ராஜசிம்ம மன்னரின் மகனான வரகுணபாண்டியன் என்ற மாறன் சடைய மன்னர் போருக்குச் செல்கிறார். அப்போது அவரது குதிரை மிகவும் வேகமாக ஓடுகிறது. அந்த சமயத்தில் அந்தணர் ஒருவர் குறுக்கே வந்தார்.
குதிரையின் வேகத்தை அடக்க முடியாமல் குதிரையின் காலில் விழுந்து உயிர் விடுகிறார் அந்தணர். இதனால் மன்னரை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட மன்னர் திருவிடைமருதூர் தலத்துக்குச் செல்கிறார்.
அத்தலத்து ஈசனை வழிபட, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார். அருகில் இருந்த திருபுவனம் தலத்துக்கு வருகிறார். பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டாலும், மீண்டும் பிடித்துக் கொள்ளுமோ என்ற அச்ச உணர்வுடனேயே இருந்தார் மன்னர்.