

ஈசனின் முழுமுதற் தன்மையையும், அவரது எல்லையற்ற கருணையையும் விளக்கும் ஓர் உன்னத நூலாக சிவபுராணம் விளங்குகிறது. இந்நூல் முதன்மையான மகா புராணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு, பிரபஞ்சத்தின் படைப்பு, காத்தல், அழித்தல் ஆகியன ஈசனாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்பதை, சுருக்கமான உரைநடை வடிவில் எடுத்துரைக்கிறது.
சிவபெருமானின் அவதாரங்கள், பார்வதிதேவியுடன் திருமணம், விநாயகர், முருகப் பெருமானின் அவதாரம் உள்ளிட்ட புராணக் கதைகள் மட்டுமின்றி, சிவலிங்க வழிபாட்டின் தத்துவம், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தின் மகிமை போன்ற ஆன்மிக உண்மைகளும் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
ஆன்மா பல்வேறு பிறவிகளைக் கடந்து ஈசனின் அருளால் பிறவித் தளையில் இருந்து விடுபட்டு முக்தி அடையும் நிலையை படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் ப.சரவணன்.
பக்தியும் ஞானமும் ஒருசேரக் கலந்து மனிதன் தர்மநெறியில் வாழ்ந்து சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டு ஈசனின் திருவடியை அடைவதற்கான ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது.