

பாலசுப்பிரமணியராக ஆண்டார் குப்பத்தில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான், காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும் ஒரே நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருவது தனிச்சிறப்பு.
தல வரலாறு: ஒரு சமயம் கயிலாயம் வந்த பிரம்மதேவர் சிறுவன் என்பதால் முருகப் பெருமானை அலட்சியம் செய்தார். பிரம்மனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த முருகப்பெருமான் அவரிடம், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்தின் பொருளைக் கேட்டார்.
பிரம்மதேவருக்கு பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. இதையடுத்து, பிரம்மதேவரை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மதேவரிடம் கேள்வி கேட்டபோது அதிகார தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் முருகப் பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.