

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 70 கிமீ தொலைவில் உள்ள காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் செல்வ வளம் அளிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
தல வரலாறு:
காளையார்கோவில் ஊர் எல்லைக்கு, சுந்தரமூர்த்தி நாயனார் வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்து, கால்களைப் பதிக்க தயங்கி நின்றார். இறைவா! உன்னைக் காண முடியவில்லையே என வருந்திப் பாடினார்.
தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச் சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும் அவ்வழியே நடந்து வந்து தன்னை தரிசிக்கலாம் எனவும் அசரீரி ஒலிக்க சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர், ‘காளையார் கோவில்’ ஆயிற்று.