

பொள்ளாச்சி - ஆழியார் அணைக்கட்டு செல்லும் வழியில் 12 கிமீ தூரத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் வாக்கு சாதுர்யம் அளிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
தல வரலாறு
இலங்கையை எரித்தபோது, அசோக வனத்தில் சீதையைத் தேடிவந்த அனுமன் அன்னையைக் கண்டதும். ராமபிரான் குறித்த விவரங்களைத் தெரிவித்துவிட்டு, கணையாழியைத் தந்து கலக்கம் தீர்த்தார். பின்னர் அந்த நற்செய்தியை ராமபிரானிடம் தெரிவிக்கப் புறப்பட்டார். அப்போது இராவணன் அனுமனைப் பிடித்து வாலில் நெருப்பை வைத்தான்.
அனுமன் இங்கும் அங்கும் தாவித் தாவி இலங்கையை தீக்கிரையாக்கினார். இங்கும் அங்கும் குதித்ததாலும், நெருப்பு, புகையாலும் ஏற்பட்ட அழுக்குப் படிந்த உடலோடு இருந்த அனுமன் சற்றே ஆசுவாசம் கொள்ளவும் தன் தோற்றம் ராமபிரானுக்கு மகிழ்ச்சியான செய்தியை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நீராடி அழுக்கைப் போக்கிக் கொள்ளவும் நினைத்தார்.
அதேசமயத்தில் அவரது வேகம் தடைபட்டு மேலும் பறப்பது தடைபட்டதால் ஆச்சரியம் அடைந்தார். தன் நிழல் கீழே ஓரிடத்தில் விழுவதையும் அது நகராமல் இருப்பதே தானும் அசைய இயலாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தார். கீழே இறங்கி ஆர்ப்பரித்துச் செல்லும் அந்த காட்டாற்றை நோக்கி, “புண்ணிய நதிகளே, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றார்.