

ஏதோவொரு மனிதனுடைய கதை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசனுடைய கதை, அறம் சார்ந்து வாழ்ந்த மாமனிதனின் கதை என்னும் வகைகளி லெல்லாம் இராமகதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடமுடியாது.
ஒவ்வொரு நோக்கில் இராமகதையைக் காணும்போதும் ஒவ்வொரு வகையான நிலைப்பாட்டைக் கொடுக்கும்; வெவ்வேறு கண்ணோக்கங்களாக இருந்தாலும், யாவுமே அறம் சார்ந்த நிலைப்பாடுகளாக இருக்கும் – இவையே இராமகதையின் பெருமைகள்! கதை மாந்தர்கள் மற்றும் கதை நிகழ்வுகள் வழியாக வேதாந்த நெறிகளைக் காட்டும் பெரும்பாடம் என்றே இராமாயணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
கதையின் ஒரு முனையில், தசரதன்; மற்றொரு முனையில், தசக்ரீவன் (இராவணன் என்றாலும், அவனுக்கு இயல்பில் சூட்டப்பட்ட பெயர் தசக்ரீவன் என்பதேயாகும்; பத்துக் கழுத்துகளைக் கொண்டவன்).
தசரதன் என்றால்……..பத்து ரதங்களைக் (தேர்களைக்) கொண்டவன் அல்லது பத்துத்தேர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன். பேரரசனாக, மிகப்பெரிய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ஒருவனை, பத்தே பத்துத் தேர்களைக் கட்டுப்படுத்துபவன் என்று சொன்னால் எப்படிப் புரிந்துகொள்வது? அதுதான், கதை சொல்லும் உருவகம்! ஒவ்வொரு மனிதரிடமும் பத்து இந்திரியங்கள் உள்ளன (இந்திரியங்கள் என்னும் சொல்லைப் பொறிகள், கருவிகள் அல்லது உபகரணங்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்).
எப்படிப் பத்து? ஐம்பொறிகள் என்றும் ஐம்புலன்கள் என்றும் அழைக்கப்பெறும் கண், செவி, நாசி, நா, மேனி ஆகிய ஐந்தும் நமக்கான அறிவு உள்நுழையும் வாயில்கள் என்பதால் இவற்றை அறிவுப் பொறிகள் அல்லது ஞானேந்திரியங்கள் எனலாம்.
அறிவு உள்நுழைந்த பின்னர்?….. அதற்கேற்ற செயல் விளையும், இல்லையா? செயலைச் செயல்படுத்தும் கருவிகள் வழியாகச் செயல் விளையும் – கைகள், கால்கள், வாய், கருவாய் (இனப்பெருக்கப் பாதை), எருவாய் (உணவு செரிமானப் பாதை) ஆகியவை மற்ற ஐந்தாகும்.