

பூ மியில் உள்ள அணுக்கள், வானில் உள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றைகூட எண்ணி விடலாம். ஆனால் உலகில் உள்ள இராமாயணங்களின் எண்ணிக்கையையோ, இராம பிரானின் நற்குணங்களையோ எண்ணவும் முடியாது. அளக்கவும் முடியாது.
18-19-ம் நூற்றாண்டுகளில், குஜராத்தி மொழியில் இயற்றப் பெற்றது கிரதர இராமாயணம். கிர்தர் அல்லது கிரதரதாஸர் என்னும் பெருங்கவி இயற்றியது. இராமகதையைப் பாடவேண்டுமென்னும் தம்முடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதாகக் கூறும் கிரதரர், தம்முடைய காப்பியத்தைச் சான்றோரிடமும் முனிவர்களிடமும் அர்ப்பணிக்கிறார்.
ஜ்யம் ஸூரஜ் ஸாமோ தீபக் கரியே, மானி லேசே
தேஹே
ஏம் மோடா தே ஜே மானி லே, ரங்கனுன் ஆப்யுன்
ஜேஹ்
(பிரகாசமிக்க) சூரியனுக்கு முன்னர் சின்னஞ்சிறு தீபத்தைக் காட்டினால், சூரியன் ஏற்பதுபோல், பெரியவர்கள் முன்னால் சிறிய தொரு பொருளை வைத்தாலும் அவர்கள் ஏற்பதைப் போல (நானும் இக்காப்பியத்தைக் காணிக்கையாக்குகிறேன்).
கதையைத் தொடங்குவதற்கு முன்னரே இராம நாமத்தின் பெருமையைப் புலப்படுத்துகிறார். காட்சி பூலோகத்திலிருந்தும் வைகுந்தத்திலிருந்தும் கைலாயத்துக்குச் செல்கிறது. அங்கே ஒருவர் தவியாய்த் தவிக்கிறார். யார்? வேறு யாராக இருக்கும்? கிரதரர் கூறுவதைத்தான் கேட்போமே!
விஷபான் மஹாதேவே கர்யும், த்யாரே தயி அக்னி
அபார்
ஸஹு அங்க் தாஜே விஷ்தகீ, துகியா தயா த்ரிபுரார்
மகாதேவரான சிவனார் நஞ்சருந்திவிட்டார்; அவர்மீது அதீதமான அக்னி இறங்கிவிட்டது; உடலின் அங்கங்கள் எங்கும் வெப்பம் தகிக் கிறது; திரிபுராரியான சிவனார் துன்பத்தில் தவிக்கிறார்.