

மகாலட்சுமி தங்களுக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற விருப்பம் முனிவர்களுக்கு இருந்துள்ளது. கடலரசனுக்கு மகளாக அவதரித்தது போல் தனக்கும் மகாலட்சுமி மகளாக அவதரிக்க வேண்டும் என்று வால்மீகி முனிவரும் விருப்பம் கொண்டார். அவரது விருப்பத்தையும் நிறைவேற்றினாள் மகாலட்சுமி.
உபபுராணங்கள் பதினெட்டில் ஒன்றாகப் போற்றப் பெறும் ப்ருஹத்தர்ம புராணமானது, இராமாயணத்தை மகாகாவியம் என்றும் இதிகாச - புராண இலக்கியங்களுக்கெல்லாம் இராமாயணமே அடிப்படை என்றும், பாராட்டுகிறது. இந்தப் புராணத்தில் அமைந்துள்ள உரையாடல் ஒன்று, நம் கவனத்தை ஈர்க்கிறது.
க்ருதம் ராமாயணம் ப்ரஹ்மான் வ்யக்தம் மோக்ஷஸ்ய ஸாதனம்
நி: ஸந்தேஹோ ஹ்யாஹம் பூத; க்ஷோப மோஹ விவர்ஜித:
பிரம்மா: வால்மீகி, உன்னுடைய இராமாயண இதிகாசம் வெகு சிறப்பு.
வால்மீகி: நன்றி குருதேவரே. தங்கள் ஆசிர்வாதம்.
பிரம்மா: இராமாயணத்தைச் செழுமையாகப் பூர்த்தி செய்துவிட்டாய். இனி மகாபாரதத்தைப் பதிவு செய்து, இன்னொரு மகா காவியமாக்கிவிடு.
வால்மீகி: மன்னித்து விடுங்கள் குருதேவரே. இராமாயணத்தை நிறைவு செய்துவிட்டேன். மனதிலிருந்த ஐயங்கள், தவிப்புகள், மாய எண்ணங்கள் யாவும் மறைந்துவிட்டன.
இனி எதற்கு இன்னொரு நூல்? இப்படி வினவுகிற வால்மீகி, இதன் பின்னர், ‘வியாசர் வரட்டும்; அவருக்குக் காவிய விதைகளைக் கொடுக்கிறேன்’ என்று உறுதியளித்து, கவிஞர்களுக்கும் காவியகர்த்தாக்களுக்கும் ஆசி கூறுகிறார்.
மேற்கூறிய உரையாடல் நடந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை; இராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் போட்டி என்பது போன்ற எண்ணமுமில்லை. உள்ளத்தின் சலனங்களைப் போக்கி, உணர்வுகளைத் தூய்மைப்படுத்தும் வல்லமை இராமாயணத்துக்கு உள்ளது என்பதே இதன் உட்பொருள்.