

அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது என்று நம் முன்னோர் கூறுவதுண்டு. அவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் நமக்கு அறிவுரையாக அமையும். எதையும் சரியாகப் பார்க்க வேண்டும், எதையும் முறையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் நல்ல உதாரணங்களுடன் நமக்கு கூறுவர்.
இராமகதையின் எதிர்மறை நாயகன் பத்துத்தலைகள் கொண்ட இராவணன். பத்துத் தலைகள் ஒருவனுக்கு இருந்திருக்க முடியுமா என்பது நவீனக் கணக்குகளின் வினா.
ஆயின், அறிவுப் பொறிகளான (ஞானேந்திரியங்கள்) கண், செவி, நா, நாசி, மேனி ஆகிய ஐந்து; செயல் பொறிகளான (கர்மேந்திரியங்கள்) கரம், பாதம், நா, உணவுப் பாதை, இனப்பெருக்கப் பாதை ஆகிய ஐந்து – ஆக மொத்தம் பத்து; இப்பத்துப் பொறிகளும் முறையாகச் செயல்படாமல், முறை தவறி, நெறி தவறி, எல்லை தவறிச் செயல்பட்டால், பூதாகாரமாகத்தானே இருக்கும்? இப்படிப்பட்ட பூதாகாரத்தின் காட்சி வடிவம்தான் பத்துத் தலைகள்!
இராவணனுக்குள் இருந்த ஆணவத்தால், அவனுடைய பொறிகள் பத்தும் எல்லை மீறியும் எக்குத்தப்பாகவும் செயல்பட்டன.
ஆணவம் மிக்கவர்களைத் ‘தலைக் கனம் கொண்டவர்கள்’ என்றும், ‘மண்டை பெருத்தவர்கள்’ என்றும் குறிப்பது உலகவழக்கம்தானே!
பத்துத் தலையனைப் பற்றிய குறிப்புகளைச் சங்கப் பாடல்கள் ஆங்காங்கே காட்டுகின்றன. இதோ ஒரு காட்சி. வேங்கை மரமொன்று நிறைய மலர்களோடு தழைத்திருக்கிறது. அதன் மஞ்சள் வண்ண மலர்களை யானை ஒன்று கண்டது.
மலர்களின் மஞ்சளுக்கு இடையில், ஆங்காங்கே கருமை; மலர்களுக்கிடையிலான இடமானது, இலைகளின் அடர் பச்சையினாலும் சூழலின் மங்கிய ஒளியினாலும் கருமையாகத் தோற்றம் தந்தது. மஞ்சளும் கருப்பும் மாற்றி மாற்றி இருப்பதைக் கண்ட யானை, ஏதோவொரு வேங்கைப் புலிதான் அங்கே இருப்பதாக எண்ணிவிடுகிறது.