

மதுரை - டி.கல்லுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி பிரிவில் இருந்து 8 கிமீ தொலைவில் பேரையூர் உள்ளது. இங்கு அருளபாலிக்கும் முத்துக்குழி மாரியம்மன் தீராத நோய்கள் தீர்ப்பவளாக போற்றப்படுகிறாள்.
400 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் ஒரு வேப்பமரம் மட்டுமே இருந்துள்ளது. அப்போது ஒரு பெண் குழந்தைக்கு ‘அம்மை’ வந்தது. குழந்தையின் நோய் தீர அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். ஆனால் குழந்தை இறந்து போய் விட்டது.
அம்மன் குழந்தையை காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாளே என்ற கவலையுடன் குழந்தையை அம்மரத்தின் அடியில் புதைத்து விட்டு திரும்பினர். அப்போது ஒரு பெண்ணின் மேல் அம்மன் இறங்கி அருள் வந்து அவர், ‘என்னை நம்பியவர்களை நான் கைவிட மாட்டேன். குழந்தை இறக்கவில்லை. புதைத்த குழியைத் தோண்டி பாருங்கள்’ எனக் கூற குழியைத் தோண்டி பார்த்தபோது குழந்தை உயிரோடு இருந்தது.
கோயில் சிறப்பு
ஒரு வேண்டுதலின் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பச் செய்த முத்துக்குழி அம்மன் மிகப்பெரிய காவல் தெய்வம். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உயிரோடு குழி தோண்டி புதைத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உயிரோடு எடுக்கின்றனர்.