

‘சிவன் சொத்து குலம் நாசம்’ என நம் பெரியவர்கள் சொல்லுவார்கள். இதற்கு தத்துவ ரீதியாக வேறு விளக்கம் தந்தாலும், பொதுவான கருத்து இறைவனின் சொத்துகளை நாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பதே.
மடத்தின் சொத்துகளை திருட வந்த கும்பலை தங்களின் தவறை உணர செய்து நல்வழிகாட்டிய மகான்தான் வ்ருத்த நரசிம்ம பாரதீ ஸ்வாமிகள் (ஆட்சி 1817- 1879) சிருங்கேரி சாரதா பீடத்தின் 32-வது பீடாதிபதியாக அருளாட்சி புரிந்த இவரது மகிமையும், ஆத்ம சக்தியும் பிரபலமானது.
இவர் சிருங்கேரியில் பிங்கள வருடம் (1797) கார்த்திகை மாதம் சுக்ல பட்ச சதுர்த்தசி அசுவதி நட்சத்திரத்தில் அவதரித்தார். 1817-யில் சந்நியாசம் பெற்று, பீடாதிபதி பொறுப்பு ஏற்ற பின்னர் தென்னாட்டிலும், வடநாட்டிலும் மடத்து பரிவாரங்களுடன் சஞ்சாரம் (விஜய யாத்திரை) செய்து வந்தார்.
அப்போது நடந்த ஒரு ருசிகர சம்பவம். வடநாட்டில் பூனா நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் முகாமிட்டு இருந்தார். மதிய பூஜைகளை முடித்து விட்டு, அடுத்த ஊரில் மாலையில் முகாமை மாற்ற வேண்டும். அன்று ஏனோ மதியம் முகாமிலிருந்து கிளம்புவதற்கு சற்று காலதாமதமாகிவிட்டதால் அடுத்த ஊருக்கு அடர்ந்த காட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அடர்ந்த காட்டை குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியாத காரணத்தாலும், சந்தியாவேளை வந்ததாலும் அங்கு இருந்த ஓர் ஓடை அருகே பரிவாரங்களை நிறுத்தி விடச் சொன்னார்.
அதே சமயம் தினமும் தவறாமல் இரவில் நடக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை நடந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் தற்காலிகமாக கூடாரம் (ஜிமீஸீ) அமைக்கப்பட்டது. துஷ்ட மிருகங்கள் வாழும் காட்டுப்பகுதி என்பதால் மடத்து சிப்பந்திகள் பயந்தனர்.