Last Updated : 02 Sep, 2021 03:30 AM

 

Published : 02 Sep 2021 03:30 AM
Last Updated : 02 Sep 2021 03:30 AM

ஆட்சியர் பாடிய பதிகப் பாடல்!

நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்வது சைவ அடியார்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே மிகவும் அத்தியாவசியமானது என்பார் திருமூலர். எவராலும் தீர்க்க முடியாத கூன் பாண்டியனின் நோயை திருநீறு பூசி, திருநீற்றுப் பதிகத்தைப் பாடி குணமாக்கினார் திருஞானசம்பந்தர்.

‘மந்திரமாவது நீறு’ எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தின் பாடல்களுக்கு இசையமைத்து தன்னிடம் இசை படிக்கும் மாணவரையே பாடவைத்திருக்கிறார் டி.எல்.தியாகராஜன். இவர், கர்னாடக இசையிலும் திரை இசையிலும் புகழோடு விளங்கிய திருச்சி லோகநாதனின் மகன். `இசைத் தென்றல் திருச்சி லோகநாதன் மியூசிக் அகாடமி’யில் இணையத்தின் மூலமாக இசையின் பால பாடத்தை டி.எல்.தியாகராஜனிடம் படிக்கத் தொடங்கிய கேசவன் ரவி ஐ.ஏ.எஸ்., தற்பொழுது மிசோரம் மாநிலத்தின் சியாகா மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வருபவர்.

நீண்ட காலம் முறையாக இசைப் பயிற்சி எடுப்பவர்களுக்கே பதிகங்களை பாடுவது எளிமையாக இருக்காது. ஆனால் உச்சரிப்பு சுத்தத்துடன் இனிமையான குரலில் பாடியிருக்கும் கேசவன் ரவியிடம் பதிகப் பாடலைப் பாடிய அனுபவத்தைக் குறித்துக் கேட்டோம்.

“எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள சங்கரன் குடியிருப்பு என்ற சிறு கிராமம். இசையின் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வத்துக்குக் காரணம் எனது தந்தைதான். சிறு வயதில் இருந்தே திரைப்படப் பாடல்களை அவர் ரசித்துப் பாடுவதைப் பார்த்து வளர்ந்தேன். ஆனால் முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனாலும் பள்ளியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டியில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற `முத்தைத் தரு’ பாடலை அப்பாவிடம் கற்றுக்கொண்டு பாடினேன். அதன் பின்னர் பின்னணி இசைக் கருவிகளோடு பாட வேண்டும் என்று மனத்தில் ஆசை இருந்தாலும் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

`ஸ்முயூல்’ கரோக்கி செயலியில் ஓய்வு நேரத்தில் பாட ஆரம்பித்தேன். அந்தப் பாடல்களைக் கேட்ட தமிழ்வேந்தன் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி, “நீ நன்றாகப் பாடுகிறாய். சங்கீதம் கற்றுக்கொள்” என்று பாரம்பரிய மான இசைக் குடும்பத்தின் வாரிசான டி.எல்.தியாகராஜனிடம் அறிமுகப்படுத்தினார். டிஜிட்டல் யுகத்தின் பலனாக, மிசோரத்தில் இருந்தாலும் இணையம் மூலமாக தியாகராஜன் சாரிடம் ஆர்வமாக இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்திற்குள்ளாகவே நான் `ஸ்முயூலில்’ பாடும்போது செய்யும் தவறுகள் புரிபட ஆரம்பித்தன. பாடுவதை நிறுத்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் இசையை முறையாக கற்றுக்கொள்ளத் தொடங்கிய சில நாட்களிலேயே, தியாகராஜன், `சென்னை வரும்பொழுது ஒரு பாடல் பதிவு செய்யலாம்’ என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அதைவிடப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. தேவாரம் போன்ற பழந்தமிழ்ப் பாடல்களை நான் எப்படி பாடி பதிவு செய்வது என்று யோசித்தேன். ஆனால் தியாகராஜனோ, “இது மிக எளிமையான மெட்டுதான் உங்களால் பாட முடியும்” என்று உற்சாகப்படுத்திப் பாட வைத்தார். எனது தமிழ் உச்சரிப்பில் சில தவறுகள் இயல்பாக வருவதுண்டு. அதையும் திருத்தம் செய்தார். அந்தப் பாடலின் பின்புலம், வரலாறு, அர்த்தம் என அனைத்தையும் எனக்குச் சொல்லித் தந்தார். நிறைய விவாதித்தார். விளக்கம் கூறினார். இதில் நான் எதுவுமே செய்யவில்லை. என்னுடைய ஆசிரியர் தியாகராஜன் சொன்னதை அப்படியே பாடினேன். ஆனால் எப்பொழுதும் பாடுவதுபோல அனுபவித்துப் பாடினேன். முதன்முதலாக ஒரு ஸ்டுடியோவில் மைக் முன்னால் நின்று பாடிய தருணம் மறக்க முடியாதது” என்று சிலிர்க்கிறார் கேசவன் ரவி.

மந்திரமாவது நீறு பாடலைக் காண: https://bit.ly/3Dt4FCz

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x