

ஓவியர் வேதா
இவரையும் இவரது வாகனத்தையும் பார்த்தால் உங்களுக்கு எது நினைவுக்கு வருகிறது? ஆம் அவர்தான். நம் ஒவ்வொருவரின் காலத்தையும் அளந்துகொண்டு இருப்பவர். ஒருகணம் கூட வீணாக்காமல் குறித்த நேரத்தில் நம் உயிரை எடுக்கும் எமதர்மன்தான் அவர். சிதம்பரம் மேலைக் கோபுரத்துக்குத் தெற்கே தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் அருகே வீற்றுள்ளார்.
கம்பீரமாக நின்ற கோலத்தில் வலக் கரத்தில் பாசக் கயிற்றையும், இடக் கரத்தைக் கதாயுதத்தின் மேலும் வைத்துள்ளார். சோழர்களுக்கேயுரிய வட்ட வடிவ, சுருண்ட, விரிந்த சடைமுடியும், கோரப்பற்களுமாக, பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறார். பயங்கரமும் அழகுணர்ச்சியின் ஒரு பகுதிதானே. மார்பிலும் இடுப்பிலும் உள்ள ஆடை, ஆபரணங்களுடன் மறக்காமல் சிம்மத்தையும் இணைத்திருப்பது வெகு சிறப்பு.
அவரது வாகனமான எருமை எஜமானரின் உத்தரவுக்குக் காத்திருக்கும் பாங்கும், வாயில் உள்ள பற்களைக் கூடத் துல்லியமாக வடித்துள்ள சிற்பியின் திறமைக்கு ஒரு"சபாஷ்" போடலாம். இவர் அட்ட திக்கு பாலகர்களில் தெற்குத் திசைக்கு உரியவர். சூரிய பகவானின் புதல்வர். சனி பகவானுக்கும், யமுனை நதிக்கும் சகோதரர். மூவருமே கருமை நிறத்தவர்கள். சாயாதேவயின் குழந்தைகள்.